சிங்கப்பூரில், ‘அல்ஸைமர்’ எனப்படும் நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 84 வயது மூதாட்டியின் பிள்ளைகள், அவரது 17 சொத்துகளையும் சேமிப்பையும் நிர்வகிக்கும் உரிமைக்குச் சண்டையிட்டனர்.
மூதாட்டியின் கணவர் 2021ல் தனது 92வது வயதில் காலமானார். இந்தச் சொத்துகள் தொடர்பில் அவர் எழுதிய உயிலின் அடிப்படையில் வீடுகளில் அந்த மூதாட்டியின் பங்கு, கூடவோ குறையவோ செய்யும்.
ஏற்கெனவே அவருக்கு, $4 மில்லியன் ரொக்கம், நிறுவனப் பங்குகள், காப்பீட்டுத் தொகை, கணவருடனான கூட்டு வங்கிக் கணக்கில் $1.3 மில்லியன் தொகை போன்றவை உள்ளன.
மூதாட்டியின் நான்கு பிள்ளைகளில் மூத்த மகளுக்கு வயது 60. வெளிநாட்டில் வசிப்பதால் சொத்து நிர்வாக உரிமையில் அவர் தலையிடவில்லை. அவரது 59 வயதுத் தம்பியும் 52 வயதுத் தங்கையும் தாயாரின் சொத்துகளை நிர்வகிக்கப் போட்டியிட்டனர்.
இருவருக்கும் இளையவரான 49 வயதுத் தம்பி, தேவாலயப் பாதிரியார். தாயாரின் உடல்நலனைப் பராமரிக்க விரும்பும் அவர், தன் சகோதரி சொத்துகளை நிர்வகித்தால் அதில் உதவத் தயார் என்றார்.
இவ்வழக்கில், மூதாட்டியின் இளைய மகளை சொத்துகளை நிர்வகிக்கும் பிரதிநிதியாகவும் இளைய மகனை அவருக்கு உதவியாகவும் நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலை இழக்க நேரிட்டால் தங்கள் சார்பில் முடிவெடுக்க ஒருவருக்கு அதிகாரம் வழங்கும் நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் பதிவுசெய்தலின் முக்கியத்துவத்தை இவ்வழக்கு வலியுறுத்துவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.