திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள பட்டதாரிகளை ஊக்குவிக்க 1984 ஜனவரியில் அரசாங்கத்தால் சமுதாய மேம்பாட்டுக் கட்டமைப்பு அமைக்கப்பட்டது.
சிங்கப்பூரர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையைத் தேட 40 ஆண்டுகளாக உதவி வந்துள்ள அந்த அமைப்பு, இனி சமுதாய கலந்துறவாடல் திட்டங்களில் கவனம் செலுத்தாது.
கடந்த ஆண்டு நவம்பரில் தனது இணையப் பக்கத்தை அது மூடியது. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், அந்த அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், தாங்கள் அளித்த ஆதரவுக்காக நன்றி கூறியது.
சமுதாய மேம்பாட்டுக் கட்டமைப்பின் இணையப் பக்கத்தைத் தேடினால் அது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் இணையப் பக்கத்திற்கு கொண்டு செல்கிறது.
அதில், ஒற்றையர்கள் ஒருவரையொருவர் சந்தித்து அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான உகந்த சூழலை ஊக்குவிக்க தனியார், மக்கள், பொதுத் துறை பங்காளித்துவ அமைப்புகளுடன் சேர்ந்து அமைப்பு பணியாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, சமுதாய மேம்பாட்டுக் கட்டமைப்பில் காலவோட்டத்தில் உறுப்பியம் குறைந்து வந்ததாகக் கூறியது. எனினும், அதுகுறித்த விவரங்களை அது வெளியிடவில்லை.
2012ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, தற்போது தனியார் துறையால் வழங்கப்படும் பலதரப்பட்ட மாற்று வழிமுறைகள் இருப்பதை அது சுட்டியது. 2012ல் தனது இணையப் பக்கத்தைத் தொடங்கிய சமுதாய மேம்பாட்டுக் கட்டமைப்பு, சமுதாய கலந்துறவாடலை ஒருங்கிணைக்க டேட்டிங் அமைப்புகளுடனும் வணிக நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றியது.
இப்போது ஒற்றையர்களுக்கு மற்ற வழிகளில் ஆதரவளிப்பதில் கவனம் செலுத்த அந்த அமைப்பு முற்படும். வலுவான உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான திறன்களை உருவாக்குவது உள்ளிட்டவை அத்தகைய வழிமுறைகளில் அடங்கும் என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.