பொதுப் போக்குவரத்துப் பேருந்து நிறுவனமான டவர் டிரான்சிட் நடத்தும் பணிமனையில் மின்வாகன மின்னூட்டிகளை இரண்டு தனியார் பேருந்து நிறுவனங்கள் பயன்படுத்த முன்வந்து உள்ளன.
சோதனை அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு அவை ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள பூலிம் பேருந்துப் பணிமனையில் உள்ள மின்னூட்டிகளைப் பயன்படுத்தும்.
அந்த பேருந்து நிறுவனங்களில் ஒன்றான டோங் டார் டிரான்ஸ்போர்ட் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அந்த மின்னூட்டிகளைப் பயன்படுத்துகிறது.
மற்றொரு நிறுவனமான லெய்ஸர் ஃபிரான்டியர் இம்மாத இறுதியில் இருந்து பூலிம் பணிமனை மின்னூட்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கும்.
பொதுப் போக்குவரத்து மின்சாரப் பேருந்துகள் பயன்படுத்தாத வேளையில் மின்னூட்டிகளை தனியார் பேருந்துகள் எந்த அளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை கண்டறிவதற்கான சோதனை ஓட்டம் இது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.
பொதுப் போக்குவரத்து மின்சாரப் பேருந்துகள் வழக்கமாக இரவு நேரங்களில் மின்னூட்டிகளைப் பயன்படுத்துவதாக ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
பூலிம் பணிமனையில் டவர் டிரான்சிட் பேருந்துகளுக்கான பழுது நீக்கும் பட்டறை இயங்குவதால், மின்னூட்ட அங்கு செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவர்.
டீசல் வாகனத்தில் இருந்து மின்வாகனத்திற்கு மாறக்கூடிய சூழலில் தனியார் பேருந்து நிறுவனங்களுக்குப் போதுமான மின்னூட்டக் கட்டமைப்பு இல்லாதது ஒரு குறையாக உள்ளது.
சிங்கப்பூரின் மின்வாகன மின்னூட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் இதுவரை தனியார் கார்கள் மீதே அதிகக் கவனம் செலுத்தி வருகின்றன.