ஜோகூர் சோதனைச்சாவடியில் திங்கட்கிழமை காலை 6 மணிவாக்கில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டன.
அதில் கிட்டத்தட்ட 10 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பயணிகள் சிலர் சமூக ஊடகங்கள் வழி படங்களைப் பகிர்ந்தனர். அதில் எஸ்பிஎஸ் பேருந்து எண் 160இன் கண்ணாடி உடைந்திருந்தது. மற்றொரு பேருந்தின் பின்பக்கம் சேதமடைந்திருந்து.
விபத்து சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவுக் கட்டடத்தில் நடந்தது.
“எஸ்பிஎஸ் பேருந்து எண் 160 அதன் பாதைத் தடத்தில் சென்று கொண்டிருந்தபோது தனியார் பேருந்து ஒன்று திடீரென எஸ்பிஎஸ் பேருந்தின் இடப்பக்கம் மோதியது. தனியார் பேருந்து பின்னோக்கி நகர்ந்தபோது மோதியதாகத் தெரிகிறது,” என்று எஸ்பிஎஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய ஒரு பயணி ஜோகூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவருகிறோம் என்றும் பேச்சாளர் கூறினார்.