வட்ட ரயில் பாதை வழியாகச் செல்லும் 64 பழைய ரயில்களில் தளமேடை இடைவெளி நிரப்பிகள் பொருத்தப்படவிருக்கின்றன.
இவற்றில் 24 ரயில்களில் நிரப்பிகள் பொருத்தப்படும் பணி முடிந்துள்ளது. எஞ்சிய 40 ரயில்களில் 2025ஆம் ஆண்டுக்குள் ரப்பர் நிரப்பிகள் பொருத்தப்படவிருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு வழித்தடங்களில் சேவையில் உள்ள 92 நான்காம் முதல் ஆறாம் தலைமுறை ரயில்களில் தளமேடைக்கும் ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் நிரப்பிகளை பொருத்துவது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் மதிப்பிட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் ரயில்களின் ஆயுட்காலம் உள்ளிட்ட அம்சங்களைப் பரிசீலித்து வருவதாக ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு வழித் தடங்களில் உள்ள புதிய ரயில்களில் இடைவெளி நிரப்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
வடக்கு-கிழக்கு வழித்தடம், டௌன்டவுன் வழித்தடம், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடம் ஆகியவற்றில் ஏற்கெனவே இடைவெளி நிரப்பிகள் உள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்திருந்தார்.
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு வழித் தடங்களில் உள்ள ரயில்களில் பாதிக்கு மேற்பட்டவை சேவையிலிருந்து படிப்படியாக அகற்றப்படும். அவற்றுக்குப் பதிலாக நிரப்பிகள் கொண்ட புதிய ரயில்கள் 2026ஆம் ஆண்டில் சேர்க்கப்படும் என்று திரு சீ ஹொங் டாட் அப்போது கூறியிருந்தார்.
நியமன நாடாளுமன்ற உறுப்பினரான ஒங் ஹுவா ஹான் கேட்ட கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக பல பயணிகள் ரயிலுக்கும் தளமேடைக்கும் இடையிலுள்ள இடைவெளியில் சிக்கிக் கொள்கின்றனர்.
2019 ஏப்ரலில் வட்ட ரயில் பாதையில் பயணம் செய்த பயணி ஒருவர், போனவிஸ்தா எம்ஆர்டி நிலையத்தில் இடைவெளியில் சிக்கிக் கொண்டார்.
இருந்தாலும் பெரும்பாலான தளமேடை இடைவெளி தொடர்பான சம்பவங்களில் பயணிகள் தாங்களாகவோ, நிலைய ஊழியர்களின் உதவியாலோ அல்லது சக பயணிகளாலோ இடைவெளியிலிருந்து மீட்கப்பட்டதாக ஆணையம் கூறியது.
டவுன்டௌன் வழித் தடங்களில் தளமேடை இடைவெளி சுமார் 36 மில்லி மீட்டர் அளவுக்கு உள்ளது. அந்தப் பாதையில் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் தடங்களில் உள்ள ரயில்களில் 110 மில்லி மீட்டர் அளவுள்ள நிரப்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட பாதையில் தரை மட்டத்தில் உள்ள வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு வழித் தடங்களில் 1997ஆம் ஆண்டிலிருந்து நிரப்பிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இது, இடைவெளியை 75 மி.மீட்டருக்கு குறைத்துள்ளது.
2015ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியிலிருந்து வடக்கு-கிழக்கு வட்டப் பாதைகளில் ஓடும் புதிய ரயில்களில் நிரப்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.