எஸ்பிஎச் ஊடக விருது: பரிந்துரைப் பட்டியலில் தமிழ் முரசு செய்தியாளர் அனுஷா

2 mins read
d3483cb5-04a5-4fd6-9e3c-ac71d5994925
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் தலைவர் கோ பூன் வானிடமிருந்து தமிழ் முரசின் செய்தியாளர் அனுஷா செல்வமணி சான்றிதழ் பெறுகிறார். - படம்: சுந்தர நடராஜ்

எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் ஊடக நிறுவனத்தின் செய்திப் பிரிவுகளுக்கான விருது நிகழ்ச்சியில் தமிழ் முரசு செய்தியாளர் அனுஷா செல்வமணி இரண்டு விருதுகளுக்கு முன்மொழியப்பட்டார்.

திங்கட்கிழமையன்று (மார்ச் 18) நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎச் ஆங்கிலம்/மலாய்/தமிழ் ஊட­கக் குழு­மத்தின் விருது விழாவில் பல்வேறு செய்திப் பிரிவுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

சிறந்த இளம் செய்தியாளர், சிறந்த செய்தியாளர், சிறந்த செய்திக்கட்டுரை என மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன:

தமிழ் முரசு செய்தியாளர் அனுஷா செல்வமணி, 26, ‘சிறந்த இளம் செய்தியாளர்’ மற்றும் ‘சிறந்த செய்திக்கட்டுரை’ என இரண்டு பிரிவுகளுக்‌கு முன்மொழியப்பட்டார். இதற்கு முன்பாக ஒவ்வொரு காலாண்டும் தமிழ் முரசு வழங்கும் சிறந்த செய்திக்கான நியூஸ்காம் விருதையும் இவர் மூன்று முறை வென்றுள்ளார்.

சிங்கப்பூரில் வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் பற்றியும், ‘தரமான உணவு வழங்கப்பட வேண்டும்’ என்ற அவர்களின் கோரிக்கை பற்றியும் விவரித்து, சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் அனுஷாவின் செய்திக் ­கட்­டுரை வெளியானது.

செய்தித் துறையில் தனக்கு மிகுந்த அனுபவம் இல்லாதபோதும் விருதுக்குத் தான் முன்மொழியப்பட்டதே பெரிய கௌரவம் என்று கூறினார் குமாரி அனு‌‌‌ஷா.

“விருது கிடைக்காவிடினும் மேடையில் ஏறி நின்றதே என் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி,” என்றும் அவர் சொன்னார்.

இதைத் தொடர்ந்து, தமிழ் முர­சிற்கு மேலும் மூன்று சிறப்பு விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ் ஆசிரியர்களைப் பற்றி எழு­திய செய்தியாளர் கி. ஜனார்த்தனன், லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி சிறப்புக் காணொளியை தொகுத்த ஒளிப்பதிவாளர் பே.கார்த்திகேயன், தமிழ்நாட்டின் கீழடி அகழாய்வு குறித்த சிறப்புக் கட்டுரையைத் தொகுத்த துணைத் தலைமை உதவி ஆசிரியர் சிவகுமார் ஆகி­யோருக்கு உன்னத விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

விருது நிகழ்ச்சியின்போது மற்ற செய்திப் பிரிவுகளைப் பற்றிய விளக்கக் காணொளியுடன் தமிழ் முர­சின் செய­லி­யைப் பற்­றி­ காணொளி ஒன்றும் காண்பிக்‌கப்பட்டது.

பெரித்தா ஹரியான் நாளிதழின் முகம்மது முஹைமின் சுசைனி மற்றும் இஸ்வாண்டி அஸ்மான் 2023ஆம் ஆண்­டின் சிறந்த செய்திக் கட்­டுரைக்கான விருதை வென்­றனர்.

பிஸ்னஸ் டைம்­ஸ் நாளிதழின் வோங் பெய் டிங் சிறந்த செய்தியாளருக்கான விருதையும் ஜெசி லிம் சிறந்த இளம் செய்­தி­யா­ளருக்கான விருதையும் வென்றனர்.

செய்­தி­ப் பிரிவுகளின் முயற்சிகளையும் செய்­தி­யா­ளர்­க­ளின் சாத­னை­க­ளை­யும் அங்­கீ­க­ரிக்கும் வகையில் இந்த விருது விழா ஆண்டுதோறும் நடத்­தப்படு­கிறது.

குறிப்புச் சொற்கள்