கடன் முதலை தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 26 வயது பெண் மீது மார்ச் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படவுள்ளது.
மார்ச் 18ஆம் தேதி ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 52ல் உள்ள ஒரு வீட்டில் கடன் முதலை தொடர்பான துன்புறுத்தல் சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் சிவப்புநிறச் சாயம் பூசப்பட்ட சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதனையடுத்து சம்பவம் நடந்த அன்று நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கண்காணிப்புக் கருவியில் பதிவான புகைப்படங்களின் உதவியுடன் ஜூரோங் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேகப் பேர்வழியான 26 வயதுப் பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட அந்தப் பெண் இதுபோன்று இன்னும் மேலும் நான்கு வீடுகளில் பல கடன் வசூல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக காவல்துறை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இதுபோன்ற கடன்முதலைத் துன்புறுத்தல் நடவடிக்கைகளைக் காவல்துறை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. சொத்துகளைச் சேதப்படுத்துதல், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று காவல் துறை அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.