எதிர்க்கட்சித் தலைவரான பிரித்தம் சிங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க கோரிக்கை விடுக்கப்போவதில்லை என்று மக்கள் செயல் கட்சி தெரிவித்து உள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நாடாளுமன்றக் குழுவிடம் பொய்யுரைத்ததாக பிரித்தம் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது தொடர்பாக தமது கட்சி கருத்துரைக்காது என்ற மசெக அமைப்புச் செயலாளர் கிரேஸ் ஃபூ தெரிவித்து உள்ளார்.
பிரித்தம் சிங் மீது சட்டப்படி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளதால், அவரை நாடாளுமன்றத்தில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்க மசெக அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கோரிக்கை விடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக திருவாட்டி ஃபூ கூறினார்.
“திரு பிரித்தம் சிங் மீதான சட்ட நடைமுறை தொடங்கப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ள சூழலில் அவரை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிமாக நீக்க மசெக எம்.பி.க்கள் கோரிக்கை விடுக்கமாட்டார்கள்,” என்று திருவாட்டி ஃபூ தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
“ரயீசா கான் உண்மைக்கு மாறாக பேசிய விவகாரத்தில் திரு சிங், திருவாட்டி சில்வியா லிம் மற்றும் திரு ஃபைசால் ஆகியோர் சம்பந்தப்பட்டு இருப்பதால், விசாரணை முடிந்து திரு சிங்கிற்கு எதிரான குற்றவியல் நடைமுறைகள் தொடங்கப்படும் வரை எந்தவொரு தடையையும் தள்ளிவைக்கலாம் என நாடாளுமன்றத் தீர்மானம் தெரிவிக்கிறது. அதற்கு இணங்க மசெக உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கமாட்டார்கள்.
“தவறு செய்யும் எந்தவோர் எம்.பி.யையும் நாடாளுமன்றம் கடுமையாகக் கையாள வேண்டும். ஆனால், ஓர் எம்.பி.யை தற்காலிகமாக நீக்கி வைப்பது என்பது சட்டத்திற்கும் நியதிக்கும் ஏற்ப எடுக்க வேண்டிய கடும் நடவடிக்கை.
“சட்ட நடவடிக்கைகளின் முடிவை நாடாளுமன்றம் முன்கூட்டியே தீர்மானிக்கக்கூடாது,” என்று திருவாட்டி ஃபூ விளக்கி உள்ளார்.