சிங்கப்பூரின் மக்கள்தொகை வேகமாக மூப்படைவதால் அதிகமானவர்கள் தங்களது வீடுகளிலேயே அமைதியாக இறக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு உதவும் வகையில் இல்லத்தில் உடல்நோவு தணிக்கும் கவனிப்பு அதிகமானோருக்கு வழங்கப்பட உள்ளது.
தற்போது அத்தகைய பராமரிப்பில் கடும் நோய்களை உடைய 2,400 பேர் உள்ளனர். 2025 இறுதியில் இதனை 50 விழுக்காடு அதிகரித்து 3,600 பேராக உயர்த்தும் திட்டம் உள்ளது.
“அதனைத் தொடர்ந்து இல்ல உடல்நோவு தணிக்கும் பராமரிப்பில் இருப்போரின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். அதற்கேற்ற வகையில் புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்படும்,” என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து உள்ளார்.
டான் டோக் செங் மருத்துவமனை ஒருங்கிணைந்த பராமரிப்பு மையத்தின் அதிகாரபூர்வத் திறப்பு நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.
இல்ல உடல்நோவு தணிக்கும் பராமரிப்புக்கான தேசிய உத்தி 2023 ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. அப்போது அந்தப் பராமரிப்பில் 2,000 நோயாளிகள் இருந்தனர். அந்த எண்ணிக்கை இவ்வாண்டு 2,800 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்த ஆண்டு உள்நோயாளிகள் மற்றும் பகல்நேர அந்திமகாலப் பராமரிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை முறையே 15 விழுக்காடு மற்றும் 12 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக உள்நோயாளிகளுக்கான மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 300 ஆகவும் பகல்நேர அந்திமகாலப் பராமரிப்புக்கான இடங்கள் 140 ஆகவும் அதிகரிக்கும்.
வீட்டிலேயே இறக்க விரும்பும் நோயாளிகள் தற்போது சில சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். தேவைக்கேற்ப மருத்துவ உபகரணங்களைப் பெறுவதில் மட்டுமின்றி அவற்றை வீட்டில் பொருத்த அதிக செலவாவதும் அவர்களுக்குச் சிரமத்தைத் தருகின்றன.
அதற்கு உதவும் வகையில் புதிய உபகரண வாடகைத் திட்டம் ஒன்றை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்கிறது. வீட்டில் நோயாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களை தனியார் நிறுவனங்களில் இருந்து நோயாளிகளின் குடும்பங்கள் வாடகைக்கு எடுப்பதை எளிதாக்கும் வகையில் பொது மருத்துவமனைகளே அவற்றை வாடகைக்கு விடும்.
இந்தத் திட்டத்திற்காக 2024 முதல் 2027 வரை மூன்றாண்டுகளுக்கு $23 மில்லியனை அமைச்சு ஒதுக்கி உள்ளது. இதன்மூலம் 12,000க்கும் அதிகமான நோயாளிகள் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.