கட்டுமான நிறுவன இயக்குநர் ஒருவர் முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு சட்ட சேவைக்காக $13,400 கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த முன்னாள் வழக்கறிஞர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர் வழக்கறிஞராக தொழில் செய்ய முடியாத நிலையில் இருந்துள்ளார் என்பது அந்த கட்டுமான நிறுவன இயக்குநருக்கு தெரியவில்லை.
லியோங் வாய் நாம் என்ற அந்த முன்னாள் வழக்கறிஞர் 2011ஆம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யயப்பட்டிருந்தார். கட்டுமான நிறுவன இயக்குநர், 59, ஹாவ் தாய் கன்ஸ்டிரக்ஷன் என்ற மற்றொரு நிறுவனத்துக்கு எதிரான சிவில் வழக்கில் அவருக்கு உதவுவதாகக் கூறி லியோங் $13,400 பெற்றுக்கொண்டார்.
லியோங் தான் ஹாவ் தாய் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனத்துக்கு எதிராக பிரமாண வாக்குமூலப் பத்திரங்கள் தயார் செய்வது போன்ற சட்டப் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி கட்டுமான நிறுவன இயக்குநரிடம் பணம் பெற்று வந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாது ஒரு கட்டத்தில் லியோங், பணம் கொடுத்தவருக்காக வழக்கில் வாதாடுவதுபோல், தான் அந்த சமயம் நீதிபதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முடிவாக லியோங் தான் வழக்காடக்கூடிய நிலையில் இருக்கும் வழக்கறிஞர் இல்லை என்று பணம் கொடுத்த அந்தக் கட்டுமான நிறுவன இயக்குநரிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து காவல் துறையிடம் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் புகார் அளிக்கப்பட்டது.
அவருக்கு உரிய தண்டனை ஏப்ரல் 17ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.