சிங்கப்பூர் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக, ஆசியாவின் ஆக மகிழ்ச்சியான நாடு என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
புதன்கிழமை (மார்ச் 20) வெளியான 2024 உலகளாவிய மகிழ்ச்சி அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
மொத்தம் 143 நாடுகள், வட்டாரங்கள் குறித்து நடைபெற்ற ஆய்வில், சிங்கப்பூர் 30ஆம் இடத்தைப் பிடித்தது.
உலக அளவில் ஆக மகிழ்ச்சியான நாடு என்ற சிறப்பை ஃபின்லாந்து மீண்டும் பெற்றுள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியவை அடுத்தடுத்த நிலையில் வந்தன.
பட்டியலின் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள், கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பிருந்தே அவற்றின் நிலையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளன.
இருப்பினும் சென்ற ஆண்டு 16ஆம் இடத்திலிருந்த அமெரிக்கா இவ்வாண்டு 23ஆம் இடத்தில் வந்தது. பட்டியலில் பிரிட்டன் 20ஆம் இடத்தையும் சீனா 60ஆம் இடத்தையும் இந்தியா 126ஆம் இடத்தையும் பிடித்தன.
ஆசிய அளவில் தைவான் இரண்டாம் இடத்திலும் ஜப்பான், தென்கொரியா, பிலிப்பீன்ஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
பிலிப்பீன்ஸ் 53வது இடத்திலும் வியட்னாம் 54வது இடத்திலும் உள்ளன.
தாய்லாந்து 58வது இடத்திலும் மலேசியா 59வது இடத்தைப் பிடித்துள்ளன.
பட்டியலில் இந்தோனீசியா 80வது இடத்தில் உள்ளது.
தனிநபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், ஆரோக்கியமான வாழ்நாள், சமூக ஆதரவு, சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த கண்ணோட்டம் என்ற ஆறு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் வல்லுநர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இந்தக் கருத்தாய்வில், உலக வங்கி, உலகச் சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் தரவுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.