ஆண்களை விட பெண்களின் இதயம் சிறிது, அதனால் இதய சிகிச்சைகள் மேற்கொள்ளும் பெண்களுக்கு பல பிரச்சினைகள் எழுகின்றன.
இருப்பினும் மருத்துவர்கள் ஆண்களுக்கு செய்யும் மருத்துவ நடைமுறைகளையே பெண்களுக்கும் பின்பற்றுகின்றனர். இதனால் ஆண்களுக்குக் கிடைக்கும் மருத்துவ பலன்கள் பெண்களுக்கு கிடைக்கவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதனால் பெண்களுக்கான இதய சிகிச்சைகளுக்கு தனி விதிமுறைகளைப் பின்பற்றி சிறப்பான சிகிச்சைகள் கொடுக்க வேண்டும் என்று சிங்கப்பூர் தேசிய இதய நிலையத்தில் பெண்கள் இதய நலப் பிரிவில் இயக்குநராக இருக்கும் பேராசிரியர் கரோலின் லம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்வதன் மூலம் இதயக் கோளாறுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை வழங்க முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஆண்கள், பெண்களுக்கான இதய சிகிச்சைகள் தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு நடத்தியவர் திருவாட்டி லம்.
அவரது ஆய்வில் இதயக் கோளாறுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சிகிச்சையின் போதும் அதற்கு பின்னரும் இருக்கும் உடல்நலம் குறித்து ஒப்பிட்டுப்பார்த்தார்.
அதில் பெண்களுக்கு உடல்நலம் சரியாகுவதில் பல சிக்கல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது வெளிப்படையாகவே பெண்களுக்கு கிடைக்கும் சிகிச்சையில் உள்ள பிரச்சினைகள் கண்ணுக்குத் தெரிகின்றன. அதனால் மருத்துவர்களும் மருத்துவ ஆய்வாளர்களும் திறம்பட செயல்பட்டு பெண்களின் இதய சிகிச்சைக்குத் தனியாக மருத்துவ நடைமுறைகளை கொண்டுவர வேண்டும் என்று திருவாட்டி லம் கேட்டுக்கொண்டார்.