தனது சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 13 குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார் அந்த தந்தை. தன் தந்தை பல காலமாக தன்னை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தார் என்று அந்த மகள் தனது சொந்த தந்தை மீது பல்வேறு புகார்களைக் கூறினார்.
அந்தக் குற்றச்சாட்டுகளின் விசாரணையில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் முன்னுக்குப் பின் முறணாக இருந்தன என்றும் அவை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்ற காரணத்தாலும் நீதிபதி வெலரி தியேன் அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்திலிருந்தும் அந்த 37 வயது தந்தையை வியாழக்கிழமை (மார்ச் 21) விடுதலை செய்தார்.
சம்பந்தப்பட்டவர்களின் அடையாளத்தைக் கட்டிக்காக்கும் பொருட்டு, அவர்களின் பெயர்களை வெளியிட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தன் மீதான பாவியல் குற்றச்செயல்கள் பற்றி அந்தப் பெண் காவல்துறைக்கு கொடுத்த வாக்குமூலம், தனது பள்ளி ஆலோசகரிடமும் தனது உளவியல் நிபுணரிடமும் தெரிவித்த தகவல்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தாமல் இருந்தன என்று நீதிபதி விளக்கினார்.
அந்தப் பெண் தொடர்பான மருத்துவச் சான்றுகள், தன் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றி பெண் தனது நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் தெரிவித்த தொடர் புகார் என இவ்விரு சாட்சிக்கூறுகளை மையமாக வைத்து அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது என்று தெரிவித்த நீதிபதி வெலரி, அரசுத் தரப்பின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அந்தப் பெண்ணின் சாட்சிக்கூறுகளை மட்டும் ஆராய்ந்து பார்த்ததாகக் கூறினார். ஆனால் பெண் கூறிய தகவல்கள் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் வலுவாக இல்லை என்றும் நீதிபதி விவரித்தார்.
தான் பாலர்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே தனது தந்தை தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று அப்பெண் கூறினார். தந்தை தன்னிடம் தவறாக நடந்துகொண்டதை தனது ஆண் நண்பரிடம் பெண் குறுஞ்செய்தி வழி தெரிவித்ததாகவும் ஆனால் தன் அருகில் இருந்த தந்தை அந்தக் குறுஞ்செய்தியை அழிக்கும்படி தன்னை வற்புறுத்தியதாகவும் பெண் சாட்சியமளித்திருந்தார்.
ஆனால் தந்தையின் சார்பில் வாதாடிய தற்காப்பு வழக்கறிஞர்களான கொரி வோங்கும் ரமேஷ் திவாரியும் ஆடவரின் கைப்பேசியை நீதிமன்றத்திடம் காட்டி, பெண் கூறிய அந்தத் தருணத்தில் தங்கள் கட்சிக்காரர் அந்த இடத்தில் இல்லை என்பதை நிரூபித்தனர்.
நீதிபதியின் தீர்ப்பைக் கேட்ட ஆடவரும் அவரைத் தற்காத்த வழக்கறிஞர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தீர்ப்புக்கு எதிராக அரசுத் தரப்பு மேல் முறையீடு செய்யுமா என்று கேட்கப்பட்டதற்கு, நீதிபதி தீர்ப்பின் விவரங்களை ஆராய்ந்த பிறகு தாங்கள் முடிவெடுக்கப்போவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.