ஆர்ச்சர்ட் ரோட்டில் வழக்கமான புனித வெள்ளிக்கிழமை வாரயிறுதி நாள் பரபரப்பைக் காட்டிலும் 2024ஆம் ஆண்டில் இரவுநேர நிகழ்ச்சிகளின்போது அச்சாலை இன்னும் பரபரப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆர்ச்சர்ட் ரோடு இரவுநேர நிகழ்ச்சி 2024ல் இன்னும் குதூகலமிக்கதாக இருக்கும்.
மார்ச் 29 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் ஆர்ச்சர்ட் ரோடு இரவுநேர நிகழ்ச்சியின்போது, விஸ்மா எட்ரியா கடைத்தொகுதி முதல் நீ ஆன் சிட்டி கடைத்தொகுதி வரை 50 சாவடிகள் உருவாக்கப்பட்டிருக்கும். அவற்றில் கலைப் பயிலரங்குகள், விளையாட்டுப் பொருள் விநியோகிக்கும் இயந்திரங்கள் என பல்வேறு நடவடிக்கைகள் இயங்கும்.
2024ல் இந்த இரவுநேர நிகழ்ச்சி பத்து முறை நடத்தப்படும் என்று மார்ச் 21ஆம் தேதி ஓர் அறிக்கை மூலம் தெரிவித்த ஆர்ச்சர்ட் ரோடு வர்த்தகச் சங்கம் ஒவ்வொரு நிகழ்வும் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரை நீடிக்கும் என்று தெரிவித்தது. ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு கருப்பொருளியில் இரவுநேர நிகழ்ச்சி நடத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வர்த்தகச் சின்னங்களையும் கொண்டு வரும் முயற்சிகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மார்ச் மாத நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர், ‘லோமா’ வர்த்தகச் சின்ன உடைகளை வாங்கலாம். அந்நிறுவனம் தனது உடைகளை பேங்காக்கில் உள்ள சட்டுசாக் வாரயிறுதிச் சந்தையில் விற்பனை செய்கிறது.
எதிர்கால நிகழ்ச்சிகளில் மலேசியா, தைவான், தென்கொரியா போன்ற நாடுகளின் வர்த்தகச் சின்னங்களைக் கொண்ட பொருள்கள் விற்கப்படும்.
“2019ல் அறிமுகமான ஆர்ச்சர்ட் ரோடு இரவுநேர நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், அதுவே 2020ல் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக நடைபெறவில்லை என்றதும் பல வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்,” என்றார் ஆர்ச்சர்ட் ரோடு வர்த்தகச் சங்கத்தின் தலைவர் திரு மார்க் ஷா.
“அண்மைய ஆண்டுகளில், சிங்கப்பூரில் இளம் தொழில்முனைவர்கள் தலையெடுத்துள்ளனர். அவர்கள் தொழில்நுட்பத் துறையில் மட்டுமல்லாது உணவு, பானத்துறை, வாழ்க்கைப்பாணி, கேளிக்கைத் துறைகளில் பிரகாசித்து வருகின்றனர்.
“ஆர்ச்சர்ட் ரோட்டில் இரவுநேர நிகழ்ச்சி மீண்டும் நடைபெறவிருப்பது, பிரபலமாகி வரும் வர்த்தகச் சின்னங்களை குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுப் பயணிகளுக்கும் இங்கு கொண்டு வரும் ஆர்ச்சர்ட் ரோடு வர்த்தகச் சங்கத்தின் கடப்பாட்டைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது,” என்றும் திரு ஷா தெரிவித்தார்.