இந்தோனீசிய அதிபர் தேர்தலில், வெற்றி பெற்ற திரு பிரபோவோ சுபியாந்தோவுக்கு, 72, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் வாக்களிப்பில் திரு பிரபோவோவும் அவரது துணை வேட்பாளர் ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்காவும் 58.59 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியைப்பெற்றனர்.
திரு பிரபோவோ வரும் அக்டோபர் மாதம் இந்தோனீசிய அதிபராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்தோனீசியாவை முன்னெடுத்துச் செல்வதில் பிரபோவோவின் திறமையையும் நம்பிக்கையையும் இந்தோனீசிய மக்கள் நம்புகின்றனர், அது தான் அவருக்கு தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது.
“பிரபோவோவின் தலைமையில் இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெறும்,” என்று அதிபர் தர்மன் கூறினார்.
வட்டார அளவிலும் உலக அளவிலும் நல்ல நுண்ணறிவைக் கொண்டவர் பிரபோவோ. அவருடன் இணைந்து இருநாட்டு எதிர்காலத் தலைமுறையினருக்கும் நல்ல இருதரப்பு கொள்கைகளுக்கான அடித்தளத்தை அமைக்க ஆர்வமாக இருப்பதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.