நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஆய்வாளர்கள், புற்றுநோயை விரைவில் கண்டறிய உதவும் புதிய ரத்தப் பரிசோதனை முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
நுரையீரல் புற்றுநோய், ‘டைப் 2’ வகை நீரிழிவு போன்றவற்றைத் துல்லியமாகவும் விரைவாகவும் கண்டுபிடிக்க, ரத்தத்தில் உள்ள ‘பிளாஸ்மா’ எனும் திரவம் பயன்படுத்தப்படுகிறது.
ரத்தத்தில் ‘பிளாஸ்மா’ திரவத்துடன் வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள், ‘பிளேட்லட்ஸ்’ ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
புதிய முறையின்கீழ், ரத்தத்தில் உள்ள ‘பிளாஸ்மா’வை 30 நிமிடங்களில் பிரித்தெடுக்க இயலும்.
தற்போது பின்பற்றப்படும் முறையின்கீழ் ‘பிளாஸ்மா’வைப் பிரித்தெடுக்கக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிடிக்கும். சில நேரங்களில் மிகச் சிறிய அணுக்கள் எஞ்சியிருப்பதால் பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இல்லாமல் போக நேரிடும்.
புதிய முறையில், ‘எக்ஸோஆர்க்’ எனும் சில்லு பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் காணப்படும் இதர பொருள்களை 99.9 விழுக்காடு அகற்றிவிட்டுத் தூய்மையான ‘பிளாஸ்மா’ திரவத்தைப் பிரித்தெடுக்க அது உதவும்.
ரத்த மாதிரிகளைச் சிறிய குழாய்களில் செலுத்தி தேவையற்ற பொருள்களை அகற்ற உதவும் இயந்திரத்தில் அது பொருத்தப்படும்.
‘எக்ஸோஆர்க்’கிற்கு காப்புரிமை எடுக்க விண்ணப்பித்திருப்பதாகவும் என்டியு ஆய்வுக் குழுவினர் அடுத்த ஓரிரு ஆண்டுகளில், அதைப் பெரிய அளவில் சோதிக்கத் திட்டமிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.