கடந்த ஆண்டு டிசம்பரில் வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில், இப்போது ரமலானுக்காக பாகிஸ்தானும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.
2022ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் நான்காவது பெரிய வெங்காய ஏற்றுமதியாளரான இந்தியா விதித்த தடையால் ஏற்கெனவே விலையேற்றத்தைக் கண்ட சிங்கப்பூர்க் கடைக்காரர்களை இது மேலும் பாதித்துள்ளது.
அது குறித்து பஃப்ளோ சாலை காய்கறி விற்பனையாளர்களின் கருத்தைத் தமிழ் முரசு அறிந்து வந்தது.
கடந்த 2023 டிசம்பருக்குமுன், 3 கிலோ இந்திய வெங்காய மூட்டைகளை 3.50 வெள்ளிக்கு வாங்கிவந்த ‘வீரா ஃபிரெஷ் மார்ட்’, இந்தியா விதித்த தடையால் பாகிஸ்தான் வெங்காயத்தை 3 கிலோவிற்கு $4 என்ற விலையில் வாங்கியது.
ஆனால், பாகிஸ்தான் வெங்காயத்தின் விலையும் படிப்படியாக ஏறியதால், தற்போது 3 கிலோ வெங்காய மூட்டையை $8.50க்கு விற்பதாகக் கூறினார் அக்கடையில் பணிபுரியும் அருண்.
விநியோகத்தில் பாதிப்பு
டிசம்பருக்கு முன்னர் 3 கிலோ மூட்டையை $2.80 - $3.50 விலையில் விற்றுவந்த ‘பொன்னி’ இந்திய மளிகைக் கடை, மார்ச் முதல் வாரத்திற்குள் அது $9.50க்கு உயர்ந்துவிட்டதாகக் கூறியது .
மார்ச் முதல் வாரத்தில் பாகிஸ்தான் வெங்காயத்தை விநியோகிப்பாளர்கள் வழங்காத நிலையில் தற்போது விநியோகம் மேம்பட்டு வருவதால் விலை சற்று குறைந்துள்ளது என்றும் அக்கடை தெரிவித்தது.
“முன்பு நமக்கு 50 மூட்டைகள்கூட கொடுப்பார்கள், ஆனால், மார்ச் முதல் வாரத்திலிருந்து 15 - 20 மூட்டைகள்தான் கொடுக்கிறார்கள்,” என்றார் சாய் சண்முகா கடையின் சக்திவேல், 63.
“முன்கூட்டியே கொள்முதலை உறுதிசெய்ததால் எங்களுக்குத் தொடர்ந்து அதே அளவில் பாகிஸ்தான் வெங்காய வரத்து இருக்கிறது,” என்று ராம் கண்ணகிக் கடையின் மேலாளர் பரத் சுப்பிரமணியன், 30, சொன்னார்.
இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து இங்குள்ள சில கடைகள் எகிப்திலிருந்து வெங்காயத்தைத் தருவிக்கின்றன. இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் வெங்காயம் மீதான தடை நீங்கி, விலை குறையும் என்ற எதிர்பார்ப்போடு கடைக்காரர்கள் காத்திருக்கின்றனர்.