தனியார் பேருந்து ஒன்றில் உள்ள வேகக் கட்டுப்பாட்டு முறையை செயலிழக்கச் செய்தார் இயந்திரவியல் வல்லுநர் ஒருவர்.
அதனால், அந்தப் பேருந்து மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லலாம் என்றிருந்ததை மீறி மணிக்கு 70, 75 கிலோமீட்டர் வேகத்தில் ஓட வழி வகுத்தது. இதற்கு உதவிய டீ வெய் சாய், 45, என்ற இயந்திரவியல் வல்லுநருக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 22) அன்று 21 வார சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
திரு டீ 2017, 2018ஆம் ஆண்டுகளில் இருமுறை, அந்தப் பேருந்து உரிமையாளரின் வாகன சோதனைக்குப் பின், அவரது பேருந்தில் உள்ள வேகக் கட்டுப்பாட்டு முறையை செயலிழக்கச் செய்தார். அந்தப் பேருந்து உரிமையாளர் எஸ்வி பஸ் டிரான்ஸ்போர்ட்டேஷன் சர்விசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த சுந்தரம் ரத்னம் என்பவர்.
மற்றொரு சம்பவத்தில், 2018ஆம் ஆண்டில், வேறொருவரின் பேருந்து புகைக் கட்டுப்பாட்டு சோதனையைக் கடக்க ஏதுவாக பேருந்து பெட்ரோல் நிரப்பும் விசையை மாற்றியமைக்க டீ உதவியதும் தெரியவந்தது.
பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவு இது பற்றி விசாரிக்கத் தொடங்கியது.