உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு அருகே வெள்ளிக்கிழமை (மார்ச் 22) ஆடவர்கள் இருவர் சண்டையிடுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வலம் வந்தது.
இதுவரை 1,500க்கும் மேற்பட்ட முறை அது பகிரப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி தனக்கு தெரியும் என்பதைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்த விசாரணை தொடர்கிறது.
தலைக்கவசம் அணியாத ஆடவர் ஒருவர், கீழே விழுந்து கிடந்த மோட்டார்சைக்கிள் மீது மற்றோர் ஆடவரைத் தள்ளிவிடுவதை அக்காணொளியில் பார்க்க முடிகிறது.
அவரை மடக்கிப் பிடித்த அந்த ஆடவர், அவரது கழுத்திற்குக் கையைக் கொண்டு சென்றார்.
அந்த ஆடவருடன் சில வினாடிகள் போராடிய பிறகு, நீல நிற தலைக்கவசம் அணிந்திருந்தவர் எழுந்து நின்றார்.
அவர்களுக்கு அருகே மற்றொரு மோட்டார்சைக்கிள் தரையில் விழுந்து கிடந்தது தெரிந்தது.
அவ்விரு ஆடவர்களும் தொடர்ந்து சண்டையிட்ட நிலையில், அங்கிருந்த மற்ற மோட்டார்சைக்கிளோட்டிகள் தலையிட்டு சண்டையை நிறுத்த முற்பட்டனர்.
சண்டை நடந்த இடமும் நேரமும் தெரியவில்லை என்றாலும், அங்கிருந்து சற்று தொலைவில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி தெரிந்தது.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு அருகே மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கு இடையில் சண்டை நடந்திருப்பது இது முதன்முறையன்று.