திருவாட்டி நூரி சியாஃபிக்கா ஷுமாஸ்வானின் ஒன்பது வயது மகள் பள்ளியின் வீட்டுப் பாடத்தைச் செய்யும்போது, அவர் தொலைத்தொடர்பு சாதனத்தைப் பயன்படுத்த சிறிது நேரமே அனுமதிப்பார்.
இது, அவருக்கும் அவருடைய மகளுக்கும் இடையிலான ‘முதலாவது சாதனத் தொழில்நுட்ப உடன்பாட்டின்’ ஓர் அம்சம்.
அச்சடிக்கவல்ல ஆவணத்துடன் கூடிய அந்த உடன்பாடு, அந்தப் பிள்ளை தொலைத்தொடர்புச் சாதனத்தைப் பயன்படுத்துவதற்குமுன் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கியமான இணைய பழக்கங்களைப் பட்டியலிடுகிறது.
இணையக் கணக்குகளை உருவாக்குமுன், செயலியைப் பதிவிறக்கம் செய்யும்முன் பிள்ளைகள், பெற்றோரிடம் அனுமதி கேட்பது, இணையத்தில் வலம் வரும் முன்பின் அறிமுகமில்லாதவர்கள் பற்றி கவனமாக இருத்தல் போன்ற விதிமுறைகள் உடன்பாட்டில் அடங்கியிருக்கும்.
உணவு, பானத்துறையில் பணியாற்றும் திருவாட்டி நூரி சியாஃபிக்கா, சிங்கப்பூர் முதலாவது சாதன இயக்கம் வழங்கும் முதலாவது சாதனத் தொழில்நுட்ப உடன்பாட்டை முதலில் பயன்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் இதர வளங்களையும் பெறுவார். அவற்றைப் பயன்படுத்தி தம் இரு மகள்களுக்கு மின்னிலக்க சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறைகளை அவர் அறிமுகப்படுத்துவார்.
மார்ச் 23ஆம் தேதி இயக்கத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்ட குடும்பங்களில் திருவாட்டி நூரி சியாஃபிக்காவின் குடும்பமும் ஒன்று.
என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ் அமைப்பின் பங்காளித்துவத்துடன் ‘டச்’ சமூக சேவைகள் அமைப்பு உருவாக்கியுள்ள இந்த இயக்கம் பாசிர் பாஞ்சாங் கூகல் அலுவலகத்தில் நடைபெற்றது.
தொடர்பு தகவல் ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையில் ‘டிஜிட்டல் ஃபார் லைஃப்’ இயக்கம் இதற்கு ஆதரவளிக்கிறது.
இயக்கத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ, இணைய உலகத்தைச் சிறுவர்கள் பாதுகாப்பாக வலம் வருவதை உறுதிசெய்வது மிகவும் முக்கியம் என்றார்.
“சிறுவர்கள் முதலில் சைக்கிளை ஓட்டும்போது பின்னால் பாதுகாப்புச் சக்கரங்களைப் பொருத்தி, அவர்களுக்கு உதவுவதை உறுதிசெய்வோம். வாகனமோட்டுவதற்கான வயதை அவர்கள் எட்டியதும், ஓட்டுநர் உரிமம் பெற அவர்களை வாகனப் பயிற்சி நிலையத்திற்கு அனுப்புவோம் .
“ஆனால், மேற்கூறிய முறையை நாம் இணைய உலகில் கடைப்பிடிக்க முடியாது. பிள்ளைகள் இணையத்தில் கற்க பல வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் அதில் ஆபத்துகளும் உள்ளன. இதுபோன்ற இயக்கம் அந்த ஆபத்துகளைக் களைய உதவும்,” என்றார்.
“நான் அனைவரும் ஒன்றுசேர்ந்து, பிள்ளைகள் இணையத்தில் பாதுகாப்பாக வலம் வருவதில் பெற்றோர்கள் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிக்க ஆதரவளிக்க வேண்டும்,” என்றும் அமைச்சர் டியோ வலியுறுத்தினார்.