போக்குவரத்து விதிகளை மீறி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மோசமான செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 47 வயது கார் ஓட்டுநர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. அந்த ஓட்டுநர் தனது வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டி ஒரு மோட்டார் சைக்கிளுக்கு விபத்து ஏற்படுத்திய சம்பவம் காணொளியில் பதிவாகியுள்ளது. அதையடுத்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறை மார்ச் 24ல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2023 மார்ச் 23ஆம் தேதி இரவு 10.10 மணிக்கு உட்லண்ட்ஸ் அவென்யூ 12ல் காரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்ட விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்தது.
“கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் இருந்த தனது காரை பின்னோக்கிச் செலுத்தி, பின்னால் இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதித் தள்ளியதோடு, காரை முன்னோக்கிச் செலுத்தியதன் மூலம் அந்த மோட்டார் சைக்கிள் மீது ஏறிச் சென்றார்.
அந்த விபத்தைக் காட்டும் காணொளியை ‘எஸ்ஜி ரோடு விஜிலன்டே்’ ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றியுள்ளது.
அந்தக் காணொளியில் வாகனத்தால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்த மோட்டார் சைக்கிளோட்டி அருகேயிருந்த புல்தரையில் போய் விழுந்தார்.
மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய அந்த கார் மீண்டும் முன்னோக்கிச் சென்றது. அதையறிந்த மோட்டார் சைக்கிளோட்டி தன்னோடு மோட்டார் சைக்கிளில் வந்த இன்னொருவரை, கார் மோதாமல் இருக்கும் வகையில் கார் செல்லும் பாதையில் இருந்து அவரைப் பாதுகாக்கச் சென்றார்.
அப்போது அந்த கார் ஓட்டுநர் தனது வாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்தி, மீண்டும் ஒருமுறை அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டுச் செல்லும் காட்சியை அந்தக் காணொளியில் காண முடிகிறது.
அதையடுத்து உட்லண்ட்ஸ் காவல்துறை பிரிவு அந்த ஆடவரை அடையாளம் கண்டு கைது செய்தது. இன்று (மார்ச் 25ஆம் தேதி) அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆடவருக்கு ஓராண்டு வரைச் சிறையும் $5,000 வரை அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.