தாங்கள் தயார்செய்யும் உணவு வகைகளில் பூச்சிகள் சேர்க்கப்பட்டால் அது திட்டமிட்ட செயல்தான் என்றும் உணவுத் தயாரிப்பில் சுத்தம் கடைப்பிடிக்கப்படாதது காரணம் அல்ல என்றும் உணவகங்கள் நிரூபிக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.
இவ்வாண்டு ஜூன் மாதத்துக்குள் 16 பூச்சி வகைகளை உணவில் சேர்க்க அனுமதி வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து தேனீ, வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளைக் கொண்டு தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் புதிய விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படக்கூடும்.
உணவுப் பாதுகாப்பு நகல் சட்டத்தின்கீழ் இடம்பெறும் விதிமுறைகளின் நோக்கம் பூச்சிகள், செயற்கையாக உருவாக்கப்படும் இறைச்சி உள்ளிட்ட உணவு வகைகளைப் பொதுமக்கள் உட்கொள்ளும் நிலையில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதாகும்.
இதன் தொடர்பில் ஜூன் மாதத்துக்குள் பொதுமக்களிடமிருந்து கருத்து சேகரிக்கப்படும். அதற்கென ஆறு அமர்வுகள் இடம்பெறும்.
எனினும், உணவுப் பாதுகாப்பு மசோதா எப்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்பது குறித்த தகவல்களை சிங்கப்பூர் உணவு அமைப்பு வெளியிடவில்லை.
தற்போது நடப்பில் இருக்கும் உணவு சம்பந்தப்பட்ட எட்டு சட்டங்களை அந்த மசோதா உள்ளடக்கும். உணவுப் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும், உணவு விநியோகத் தடைகளை எதிர்கொள்வதற்கான ஆற்றலை வலுப்படுத்தவேண்டும்; அவற்றின் மூலம் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய புதிய மசோதா சிங்கப்பூர் உணவு அமைப்புக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும்.
மனிதர்கள் பூச்சிகளை உட்கொள்ளச் செய்ய ஐக்கிய நாட்டுச் சபையின் உணவு, வேளாண் அமைப்பு ஊக்குவித்து வருகிறது. பூச்சிகளில் அதிக புரதச் சத்து இருப்பது அதற்கான காரணங்களில் ஒன்று. உலகின் மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையில் நீடித்த நிலைத்தன்மை அம்சத்துடன் அதிகச் செலவின்றி உணவு கிடைக்கச் செய்வதும் ஒரு காரணம்.
அந்த வகையில் உணவுத் தயாரிப்பில் சுத்தம் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான விதிமுறைகளைப் புதிய மசோதா கொண்டிருக்கும்.