சமூக ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக புனித ரமலான் மாதத்தை ஒட்டி 1,500 குடும்பங்களுக்காக ‘இஃப்தார்’ எனப்படும் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ‘வொன் கம்போங் கிளாம்’ சனிக்கிழமை (மார்ச் 24ஆம் தேதி) ஏற்பாடு செய்திருந்தது.
‘கெமிலாங் கம்போங் கிளாம்’ என்ற பெயரில் அராப் ஸ்திரீட் வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில், அதிபர் தர்மன் சண்முகரத்தினம் தம் துணைவியாருடன் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தார்.
நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் முஸ்லிம் நண்பர்களுடன் பிற சமயங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வதன் மூலம் ஒருவருக்கொருவர் இடையே புரிந்துணர்வை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்ற நோக்கத்துடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
‘விஷன் 21’ எனும் லாப நோக்கற்ற அமைப்பின் கீழ் இருக்கும் பயனாளிக் குடும்பங்களுக்கு நிகழ்ச்சியில் ரமலான் மாதத்தை முன்னிட்டு இலவச மளிகைப் பொருள்களும் புத்தாடைகளும் கொண்ட அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.
“குடும்பமாக நாங்கள் எட்டுப் பேர் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளோம். எங்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்புப் பைகள் மிக உதவியாக இருக்கும். இதனால் எங்கள் செலவுகளை மிச்சப்படுத்தலாம். அதிபர் இந்நிகழ்ச்சிக்கு வந்தது மேலும் ஒரு சிறப்பு,” என்றார் பயனாளிகளில் ஒருவரான ஹமீது சுல்தான், 65.