உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் மார்ச் 25ஆம் தேதி தெரிவித்துள்ளது.
புனித வெள்ளி, சிங் மிங் விழா, நோன்புப் பெருநாள் ஆகியவை அந்தக் காலகட்டத்தில் இடம்பெறுவதை அது சுட்டியது.
புனித வெள்ளி மார்ச் 29ஆம் தேதியும் சிங் மிங் விழா ஏப்ரல் 4ஆம் தேதியும் அனுசரிக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் நோன்புப் பெருநாள் ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
எனவே, கூடுதல் காத்திருப்பு நேரத்தைக் கருத்தில் கொள்ளும்படியும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடந்துகொள்வதுடன் சோதனைச்சாவடிகளில் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும்படியும் பயணிகளை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடப்பிதழ்கள் அடுத்த ஆறுமாதக் காலத்திற்கு காலாவதி ஆகாமலிருப்பதை உறுதிசெய்துகொள்ளும்படி அது நினைவுறுத்தியது.
தடைசெய்யப்பட்ட பொருள்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவரக்கூடாது என்பதையும் பயணிகளுக்கு ஆணையம் நினைவூட்டியது.
மார்ச் 8 முதல் 18ஆம் தேதி வரையிலான பள்ளி விடுமுறைக் காலத்தின்போது 5.1 மில்லியன் பயணிகள் சிங்கப்பூரின் இரு சோதனைச்சாவடிகளையும் கடந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 15ஆம் தேதி மட்டும் கிட்டத்தட்ட அரை மில்லியன் பயணிகளை இரு சோதனைச்சாவடிகளும் கையாண்டன.
உச்ச நேரங்களில் காரில் பயணம் செய்தோர், குடிநுழைவுச் சோதனைகளை நிறைவேற்ற, கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் காத்திருந்ததாக ஆணையம் சொல்லிற்று.
தற்போது அவர்கள் புதிய கியூஆர் குறியீட்டு நடைமுறையைப் பின்பற்றி விரைவாக அச்சோதனைகளை நிறைவேற்ற இயலும்.
மார்ச் 19ஆம் தேதி நடப்புக்கு வந்த அந்த முறையின்கீழ், காரில் பயணம் செய்வோர் கடப்பிதழ்களைப் பயன்படுத்தாமல் குடிநுழைவுச் சோதனையை நிறைவேற்ற முடியும். முன்னதாக அவர்கள் ‘மைஐசிஏ’ செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் கடப்பிதழ் விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.