கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் தமது பங்களிப்புகளுக்காக பிரிட்டனைச் சேர்ந்த சிங்கப்பூர் மருத்துவர் ஒருவருக்கு கௌரவ வீரத்திருமகன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் அரசாங்க இணையப்பக்கத்தில் மார்ச் 21ஆம் தேதி குறிப்பிடப்பட்ட தகவலின்படி 56 வயது பேராசிரியர் லிம் வெய் ஷென்னுக்கு அப்பட்டம் அளிக்கப்பட்டது.
கொவிட்-19 தடுப்பூசி கூட்டுக்குழுத் தலைவராக பேராசிரியர் லிம்மின் பங்களிப்புக்கு அப்பட்டம் வழங்கப்பட்டது. பெருந்தொற்றின்போது கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் தொடர்பில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சுயேச்சை ஆலோசகராகவும் அவர் செயல்பட்டார்.
கௌரவ வீரத்திருமகன் பட்டம் பெறுவதை தாம் மாபெரும் கௌரவமாகக் கருதுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேராசிரியர் லிம் கூறினார்.
2003லிருந்து நாட்டிங்ஹம் பல்கலைக்கழக மருத்துவமனையில் சுவாச நோய் மருத்துவராகவும் நாட்டிங்ஹம் பல்கலைக்கழகத்தில் கௌரவ மருத்துவப் பேராசிரியராகவும் உள்ள அவர், மருத்துவக் கழகங்களிடம் இருந்து பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.