துவாஸில் லாரியுடன் மோதிய விபத்தில் 45 வயது மோட்டார் சைக்கிளோட்டி மரணமடைந்தார்.
துவாஸ் வெஸ்ட் ரோடும் ஜாலான் அஹமது இப்ராகிம் சாலையும் சந்திக்கும் இடத்தில் இரு வாகனங்கள் மோதிக்கொண்டது பற்றி திங்கட்கிழமை (மார்ச் 25) காலை 7.30 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்த மோட்டார் சைக்கிளோட்டி பின்னர் உயிரிழந்ததாக காவல்துறை கூறியது.
அதனைத் தொடர்ந்து, மரணம் விளைவிக்கும் அளவுக்கு ஆபத்தாக வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 25 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
இந்த விபத்து தொடர்பாக எஸ்ஜி ரோடு விஜிலன்டே ஃபேஸ்புக் குழுவில் காணொளி ஒன்று பதிவேற்றப்பட்டது.
போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சிவப்பைக் காட்டியபோதும் லாரி முன்னோக்கி ஓடியதை அந்தக் காணொளியில் காணமுடிந்தது. பின்னர், போக்குவரத்துச் சந்திப்பின் நடுவில் திடீரென்று அந்த லாரி நிறுத்தப்பட்டது.
அப்போது லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியதும் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளோட்டி தூக்கிய எறியப்பட்டதும் காணொளியில் தெரிந்தது.
2023ஆம் ஆண்டு 136 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 25.9 விழுக்காடு அதிகம்.
2022ஆம் ஆண்டு 108 பேர் சாலை விபத்தில் மாண்டனர். அவர்களில் பாதிப் பேர் மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றவர்கள்.