நோன்புப் பெருநாளை முன்னிட்டு எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 10ஆம் தேதி நோன்புப் பெருநாள்.
அதற்கு முந்திய நாளான ஏப்ரல் 9ஆம் தேதி இந்தச் சேவைகளின் நீட்டிப்பு இருக்கும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) தெரிவித்தது.
வடக்கு கிழக்குப் பாதை (NEL), டெளன்டவுன் பாதை எம்ஆர்டி ரயில்களையும் மற்றும் செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி ரயில்களையும் அந்த நிறுவனம் நடத்துகிறது.
அவற்றின் சேவை நேரங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 பேருந்துகளின் சேவை நேரங்களும் நோன்புப் பெருநாளுக்காக நீட்டிக்கப்படும் என்று அது கூறியது.
பொங்கோல் செல்லும் கடைசி ரயில் ஏப்ரல் 9 பின்னிரவு 12.30 மணிக்கு ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்தில் புறப்படும்.
அதேபோல ஹார்பர்ஃபிரண்ட் செல்லும் கடைசி ரயில் அன்று பின்னிரவு 12.02 மணிக்கு பொங்கோல் நிலையத்திலிருந்து கிளம்பும். அந்த ரயில்களின் நேரத்திற்கு ஏற்ப எல்ஆர்டி ரயில்களின் நேர நீட்டிப்பு இருக்கும்.
எக்ஸ்போ செல்லும் கடைசி ரயில் ஏப்ரல் 9 பின்னிரவு 12.03 மணிக்கு புக்கிட் பாஞ்சாங் நிலையத்தில் இருந்தும் புக்கிட் பாஞ்சாங் செல்லும் ரயில் பின்னிரவு 12.04 மணிக்கு எக்ஸ்போ நிலையத்தில் இருந்தும் புறப்படும்.
22 பேருந்து சேவைகளின் நேர நீட்டிப்பு விவரத்தையும் எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்து உள்ளது.