மோசடிகளால் பாதிக்கப்படுவோருக்கு உதவ வங்கி ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது யுஓபி வங்கி.
அந்த வகையில் கணினியை ஊடுருவும் தீய செயலை எவ்வாறு செய்கிறார்கள் என்பது குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) நடத்தப்பட்ட வகுப்பில் வங்கி ஊழியர்கள் கணினி ஊடுருவல்காரர்களாகப் பயிற்சி எடுத்தனர்.
பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பாடமாக அளிக்கப்பட்டது.
திருவாட்டி டியோவின் குரல் வழக்கத்திற்கு மாறானதாக ஒலிக்கும் வகையில் ஒரு காணொளி அளிக்கப்பட்டபோது அது குரல் மாற்றம் (மிமிக்ரி) செய்யப்பட்டது என்று உடனடியாக பயிற்சியாளர்களில் பலர் கண்டுபிடித்தனர்.
மற்றொரு காணொளி செயற்கை நுண்ணறிவின் உதவியோடு தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அது போலி என்று யாராலும் கண்டறிய இயலவில்லை.
யுஓபி பயிற்சி அரங்கில் இருந்த உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், இரண்டு காணொளிகளும் போலியானவை என்றார்.
“எனக்கு அவரைத் (திருவாட்டி டியோ) தெரியும். அவரது குரல் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியும்.
“ஆனால், பொதுமக்களுக்கு இந்தக் காணொளிகளைப் போட்டுக் காட்டினால், அவர்களுக்கு எவ்வித சந்தேகமும் ஏற்படாது,” என்று அவர் பயிற்சி வகுப்பறையில் கூறினார்.
பொய்யை உண்மைபோலக் காட்டும் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு தலையெடுத்து உள்ளது என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சிங்டெல், சிங்கப்பூர் நிர்வாகக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து யுஓபி வங்கி நடத்தும் இந்த இருநாள் பயிற்சி வகுப்பில் ஓர் உதாரணமாக அந்தக் காணொளிகள் காண்பிக்கப்பட்டன.
கணினி ஊடுருவல் மற்றும் பொய்யை உண்மைபோலக் காட்டுதல் போன்றவை உள்ளிட்ட பெருகிவரும் மோசடிகளைக் கண்டறிந்து சமாளிக்க பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற பயிற்சித் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியத்தையும் அது உணர்த்துகிறது.
குறிப்பாக, முன்னிலையில் உள்ள பணியாளர்கள் மோசடிகளைக் கண்டறியக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிங்டெல் இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநர் வில்சன் டான் கூறினார்.
தெம்பனிஸில் உள்ள பயிற்சி அரங்கில் பயிற்சித் திட்டத் தொடக்க நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
போலி என்று கண்டறியக் கடினமாக இருக்கும் மோசடித் தொழில்நுட்பம் வழி வாடிக்கையாளர்கள் பெயரில் பரிவர்த்தனைகள் நடத்தப்படுவதை முன்னிலைப் பணியாளர்கள் கண்டறிவது அவசியம் என்றார் அவர்.
வங்கிக் காசாளர்கள், கேள்விப்படுவதன் அடிப்படையில் முடிவெடுப்பதற்குப் பதில் இதுபோன்றவற்றை சரிபார்க்க வேண்டும் என்றும் திரு டான் தெரிவித்தார்.