சிங்கப்பூரில் புகைபிடிக்கும் பழக்கமுடையவர்கள் சிகரெட் பிடிப்பதைக் குறைத்துள்ளனர்.
ஆனால் அவர்களிடையே மின்சிகரெட் பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வாரந்தோறும் சராசரியாக 72 சிகரெட்டுகள் புகைபிடிக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 56ஆக குறைந்தது.
ஒப்புநோக்க, அதே காலகட்டத்தில் மின்சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை 3.9 விழுக்காட்டிலிருந்து 5.2 விழுக்காடு அதிகரித்தது.
“2022ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து வாரந்தோறும் புகைபிடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்துள்ளது.
“இந்தக் காலகட்டத்தில் நாள்தோறும் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையைவிட அவ்வப்போது சிகரெட் பிடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம்,” என்று ஆய்வை நடத்திய மில்லியு இன்சைட் அமைப்பு கூறியது.
இந்த ஆய்வை மில்லியு இன்சைட் அமைப்பு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை நடத்தியது. ஆய்வின் முடிவுகளை அது மார்ச் 26ல் வெளியிட்டது.
அவ்வப்போது புகைபிடிப்பவர்களின் விகிதம் 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 1.2 விழுக்காடாக இருந்தது. இது 2023ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 3.2 விழுக்காடாக அதிகரித்தது.
அதே காலகட்டத்தில் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டவர்களின் எண்ணிக்கையும் ஏற்றம் கண்டது.
ஆய்வில் 6,000 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பங்கெடுத்தனர். அவர்கள் 21 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
மின்சிகரெட் பிடிக்கும் பழக்கும், அவ்வப்போது புகைபிடிக்கும் பழக்கமுடையவர்களிடையே ஆக அதிகமாக இருந்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.