சிங்கப்பூர், மலேசியக் காவல்துறை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையின் விளைவாக, சிங்கப்பூரர்களைக் குறிவைக்கும் மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர்க் காவல்துறையின் வர்த்தக விவகாரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் அரச மலேசியக் காவல்துறையின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் கோலாலம்பூரில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் மார்ச் 20ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.
சிங்கப்பூரர்களைக் குறிவைக்கும் வேலை மோசடிகள் மற்றும் இதர மோசடிகள் மூலம் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர். இரண்டும் மாதர்களும் மூன்று ஆடவர்களுமான அவர்கள் 23 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அந்தக் கும்பல் இவ்வாண்டுத் தொடக்கத்தில் தனது மோசடி நடவடிக்கைகளைத் தொடங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூர்க் காவல்துறையிடம் தெரியப்படுத்தப்பட்ட குறைந்தது 40 சம்பவங்களில் அக்கும்பலுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் S$820,000க்கும் அதிகமான பணத்தை இழந்தனர்.