தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் மூத்த தாதியாக பணியாற்றும் 36 வயதாகும் மாலினி ராஜேந்திரனுக்குப் பின்முதுகில் வலி இருந்துகொண்டே இருந்தது.
பின்னர், அவரது வலது காலுக்கு வலி பரவி, அவ்வப்போது உணர்வின்மையும் ஏற்பட்டது.
வலி நாளடைவில் அதிகமாக, மாலினிக்கு ‘ஸ்லிப் டிஸ்க்’ மற்றும் அதனால் நரம்புப் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளதை மருத்துவர் கண்டறிந்தார். முதலில் ‘பிசியோதெரப்பி’யையும் மாத்திரைகளையும் அப்பிரச்சினைக்குத் தீர்வாக மருத்துவர் பரிந்துரைத்தார்.
அதனால் பயனேதும் கிட்டாததால் மாலினி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. எதிர்பாராத விதமாக ஒருமுறை மாலினி கீழே விழுந்து முதுகின் அதே பகுதி பாதிக்கப்பட, அது நிலைமையை மேலும் மோசமாக்கியது.
மாலினி சென்ற ஆண்டு இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அவர் தற்போது நலமாக உள்ளார். அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட அவர், இன்று நலமாக உள்ளார்.
மாலினியைப் போல, சிங்கப்பூர் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட இரண்டு விழுக்காட்டினர் ‘ஸ்லிப் டிஸ்க்’ பிரச்சினையால் பாதிக்கப்படலாம் என்று தேசிய பல்கலைக்கழக முதுகெலும்புக் கழகத்தின் மூத்த ஆலோசகரும் இணைப் பேராசிரியருமான ஜோசப் சாந்தகுமார் தம்பையா கூறினார்.
‘ஸ்லிப் டிஸ்க்’ பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணாவிட்டால் நோயாளிக்கு நிரந்தர நரம்பு பாதிப்பு ஏற்படலாம் என்றும் வலி நாட்பட்டதாக மாறிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இப்பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகாது என்ற அவர், வலியிலிருந்து விடுபட நோயாளிகளுக்கு முதலில் மாத்திரைகள்தான் பரிந்துரைக்கப்படும் என்றும் சொன்னார்.
ஒருவரின் கீழ் இடுப்பு, முதுகெலும்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் ‘ஸ்லிப் டிஸ்க்’ பிரச்சினை எளிதில் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் போவது, வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுவது, வலுவிழந்து காணப்படுவது என முதுகெலும்பு பிரச்சினை பல வழிகளில் ஒருவரைப் புரட்டிப் போடலாம்.
பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின், தேசியப் பல்கலைக்கழக முதுகெலும்புக் கழகம் அதன் முதல் ‘ஸ்பைன் சிம்போசியம்’ கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
பொதுமக்கள் வரும் மார்ச் 30ஆம் தேதி, சனிக்கிழமை காலை முதல் மாலை வரை அந்நிகழ்வில் கலந்துகொள்ளலாம். மருத்துவ நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளையும் அவர்கள் பகிர்ந்துகொள்ளும் முக்கியத் தகவல்களையும் அறிந்துகொண்டு பொதுமக்கள் நலமிக்க வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கலாம்.
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.