தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ‘தமிழ்ப் பேச்சு பேச வா’ என்ற கருப்பொருளில் பேச்சுப் போட்டிக்கும் நாடகப் போட்டிக்கும் ஏற்பாடு செய்தது.
மாணவர்களின் மேடைத் திறனை வளர்ப்பதற்காக இந்தப் போட்டிகள் தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் நடத்தப்பட்டன. உயர்நிலை 3 முதல் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் வரை போட்டியில் பங்குபெற்றார்கள்.
‘உலகவெப்பமயமாதலின் காரணமும் தீர்வும்’, ‘இல்லங்களில் தாய்மொழிப் பயன்பாடு குறைவதற்கான காரணமும் தீர்வும்’, ‘இன நல்லிணக்கத்திற்கு மாணவர்களின் பங்கு’ ஆகியவை பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்.
‘மூத்தோர்க்கு மரியாதை’, ‘இன நல்லிணக்கம்’, ‘இல்லங்களில் தாய்மொழி’ ஆகியவை நாடகப் போட்டிக்கான தலைப்புகள்.
கடந்த மார்ச் 24ஆம் தேதி இறுதிச்சுற்று நடைபெற்றது. அனைத்துப் போட்டிகளும் விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் இடம்பெற்றன.
இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவர் இரா. இராஜாராம், இறுதிச்சுற்றின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மூத்த தமிழாசிரியர் முகமது சரீஃப், இணைப்பேராசிரியர் அப்துல் ரவூஃப், லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) ஆலோசகர் ஜாய்ஸ் கிங்ஸ்லி ஆகியோர் போட்டி நடுவர்களாகப் பொறுப்பாற்றினர். இரண்டு போட்டிகளுக்கும் முதல் பரிசு ($500), இரண்டாம் பரிசு ($300), மூன்றாம் பரிசு ($200), ஆறுதல் பரிசுகள் ($100) வழங்கப்பட்டன.