பொய்த் தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்கான ‘பொஃப்மா’ எனப்படும் இணையம்வழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எதிர்க்கட்சி அரசியல்வாதி கோ மெங் செங்கிற்கும் அவரது மக்கள் சக்தி கட்சிக்கும் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லம் சாங் பில்டிங் கான்டிராக்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு லம் கொக் செங்கிடம் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் விலையுயர்ந்த அன்பளிப்புகள் பெற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து அமைச்சராக ஈஸ்வரன் பதவி வகித்தபோது, திரு லம்மின் நிறுவனத்துக்கு எவ்வித ஒப்பந்தங்களையும் நிலப் போக்குவரத்து அமைச்சு வழங்கவில்லை என்று போக்குவரத்து அமைச்சு மார்ச் 27ஆம் தேதி தெரிவித்தது.
2021ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதிக்கும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக ஈஸ்வரன் பதவி வகித்ததாக அமைச்சு கூறியது.
அப்போது திரு லம்மின் நிறுவனத்துக்கு விலையுயர்ந்த ஒப்பந்தம் ஒன்றை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியதாக திரு கோ மார்ச் 26ல் பதிவிட்டிருப்பது உண்மையல்ல என்று அமைச்சு தெரிவித்தது.
இதையடுத்து, தமது பதிவுகளுக்கு திரு கோ திருத்த குறிப்புகளைப் பதிவேற்றம் செய்துள்ளார்.