‘ஆட்டிசம்’ குறைபாடு கொண்டோருக்கு ஆதரவுக்கரம் நீட்ட நடத்தப்படும் பொது வரவேற்புத் தினங்கள்

‘ஆட்டிசம்’ குறைபாடு கொண்டோருக்கு ஆதரவுக்கரம் நீட்ட நடத்தப்படும் பொது வரவேற்புத் தினங்கள்

1 mins read
3bba35e2-68b3-47c5-93ce-6619daa6b297
செயின்ட ஆண்ட்ரூஸ் ஆட்டிசம் நிலையத்தின் மொட்டை மாடியில் உள்ள நகர்ப்புற விவசாயப் பண்ணையில் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளிலிருந்து அவற்றின் வேரை அகற்றும் பணியில் ஆட்டிசம் குறைபாடு கொண்ட பெரியவர்கள் ஈடுபட்டனர். நடப்பட்ட நாற்றுகளை அவர்கள் பத்திரப்படுத்த உதவினர். - படம்: பெரித்தா ஹரியான்

‘ஆட்டிசம்’ எனப்படும் தொடர்புத்திறன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள பெரியவர்களுக்கு ஆதரவு வழங்க ஆர்வம் கொண்ட நிறுவனங்களுக்காகப் பொது வரவேற்புத் தினங்களை ஐந்து முகவைகள் நடத்த இருக்கின்றன.

சிறப்புத் தேவையுள்ளோருக்கான பள்ளிகளிலிருந்து தேர்ச்சிபெறுவோருக்கு வேலை தேடித் தரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டோருக்கு நகர்ப்புற விவசாயத்தில் அளிக்கப்படும் பயிற்சி விரிவாக்கம் செய்யப்படுகிறது.

செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆட்டிசம் நிலையம் ஏற்று நடத்தும் இத்திட்டம் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் ஆட்டிசம் கட்டமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தக் கட்டமைப்பில் செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆட்டிசம் நிலையம், சிங்கப்பூர் ஆட்டிசம் சங்கம், ஆட்டிசம் வளங்கள் மையம், ஆசிய மகளிர் நலச் சங்கம், ரேன்போ மையம் ஆகியவை இடம்பெறுகின்றன.

ஆட்டிசம் குறைபாடு கொண்ட பெரியவர்களுக்கு ஆதரவு வழங்குவதில் தன்னுடன் இணைந்து செயல்படக் கூடுதல் பள்ளிகள், நிறுவனங்கள், சமூகக் குழுக்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றுக்கு கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெரியவர்களுக்கு தன்னுடன் இணைந்து ஆதரவுக்கரம் நீட்ட விரும்புவோருக்கு இந்த ஐந்து சமூக சேவை அமைப்புகளும் ஏப்ரல் மாதத்தில் பொது வரவேற்புத் தினங்களை நடத்துகின்றன.

ஒன்றரை மணி நேரம் நீடிக்கும் பொது வரவேற்புத் தினங்கள் இலவசமாக நடத்தப்படுகின்றன.

அவற்றை இந்த ஐந்து சமூக சேவை அமைப்புகளின் மூத்த நிர்வாகம் ஏற்று நடத்தும்.

பொது வரவேற்புத் தினங்களில் பங்கேற்க விழைவோர் bit.ly/ansopenhouses2024க்குச் சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்