ஏப்ரல் முதல் ஜூன் வரை எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் சற்று குறையும்

ஏப்ரல் முதல் ஜூன் வரை எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் சற்று குறையும்

2 mins read
0d1b4173-46c9-470c-9837-c367225ca12a
எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கான செலவுகள் குறைந்ததே கட்டணக் குறைவுக்குக் காரணம் என்று எஸ்பி குழுமம் கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் சற்று குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை, மின்சாரக் கட்டணம் 0.3 விழுக்காடு குறையும் என்று எஸ்பி குழுமம் வியாழக்கிழமை (மார்ச் 28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஒரு கிலோவாட் மணி நேரத்துக்கு (kWh) கட்டணம் 29.79 காசாக (பொருள், சேவை வரிக்கு முன்னர்) இருக்கும். தற்போது அது 29.89 காசாக உள்ளது.

புதிய கட்டணத்தின்படி, நாலறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கான சராசரி மாதாந்தர மின்சாரக் கட்டணம் 33 காசு குறையும் (ஜிஎஸ்டிக்கு முன்னர்), அதாவது $98.51லிருந்து $98.18ஆகக் குறையும்.

எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கான செலவுகள் குறைந்ததே இதற்குக் காரணம் என்று எஸ்பி குழுமம் கூறியது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயுக் கட்டணம் ஒரு கிலோவாட்-மணி நேரத்துக்கு 0.03 காசு குறையும் என்று சிட்டி எனர்ஜி வெளியிட்ட மற்றோர் அறிக்கையில் தெரிவித்தது.

குடும்பங்கள் ஒரு கிலோவாட்-மணி நேரத்துக்கு 23.12 காசு செலுத்தும் (ஜிஎஸ்டிக்கு முன்னர்). தற்போது அது 23.15 காசாக உள்ளது. ஜிஎஸ்டியுடன், எரிவாயுக் கட்டணம் 25.20 காசாக இருக்கும்.

ஜூலை 1 முதல் குப்பைகள் அகற்றும் பணிகளுக்கான கட்டணம் அதிகரிப்பு

ஜூலை 1ஆம் தேதி முதல் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், தனியார் குடியிருப்புகளிலிருந்து குப்பைகளை அகற்றும் பணிகளுக்கான கட்டணம் அதிகரிக்கிறது.

செயல்முறை, மனிதவள செலவினங்கள் உயர்ந்திருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், தனியார் அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றுக்கான மாதாந்திர குப்பைகள் அகற்றும் பணிகளுக்கான கட்டணம் 39 காசு அதிகரித்து $9.81லிருந்து $10.20ஆக உயரும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் மார்ச் 28ல் தெரிவித்தது.

தரை வீடுகளில் வசிப்பவர்கள் குப்பை அகற்றும் பணிகளுக்காக மாதந்தோறும் கூடுதலாக $1.33 செலுத்த வேண்டும்.

அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் $32.67லிருந்து $34ஆக ஏற்றம் காண்கிறது.

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த கழிவுகள் நிர்வாக முறை நீடித்த நிலைத்தன்மையுடன் செயல்படுவதை கட்டணத்தில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் உறுதி செய்யும் என்று வாரியம் தெரிவித்தது.

வீவக வீடுகளில் வசிப்போர், தங்களது யு-சேவ் தள்ளுபடிகளை குப்பை அகற்றும் பணிக்கான கட்டணங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியுள்ளது. யு-சேவ் கட்டணத் தள்ளுபடிகள் நேரடியாக தகுதிபெறும் குடும்பத்தாரின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். 2024ஆம் நிதி ஆண்டுக்கான தள்ளுபடிகள் ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களிலும் 2025 ஜனவரி மாதத்திலும் வரவு வைக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
மின்சாரம்எரிவாயுகட்டணம்வீவக