கடற்துறையில் பெரிய நிறுவனமான முன்னர் செம்ப்கார்ப் என்று அழைக்கப்பட்ட சீட்ரியம் நிறுவனத்தின் இரு முன்னாள் நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவ்விருவரும் பிரேசில் நாட்டில் தங்கள் வர்த்தக நலன்களுக்காக $20 மில்லியனுக்கும் மேலாக லஞ்சமாகக் கொடுத்ததாக வியாழக்கிழமை (மார்ச் 28) அன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீட்ரியம் நிறுவனத்தின் முன்னாள் ஆலோசனை நிறுவனமான குயில்ஹர்ம் எஸ்டீவ்ஸ் டி ஜீசஸ் என்ற நிறுவனத்துக்கு ஐந்து முறை லஞ்சம் வழங்கக் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக அரசு நீதிமன்றத்தில் 62 வயது வோங் வெங் சன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் 14 ஆண்டுகளாக செம்ப்கார்ப் நிறுவனத்தில் தலைவர், நிர்வாக இயக்குநர், தலைமை நிர்வாகி ஆகிய பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூரோங் கப்பல் பட்டறை உட்பட, சீட்ரியம் நிறுவனத்தின் கிளை நிறுவனங்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்ல திரு வோங் அந்த ஆலோசனை நிறுவனத்துக்கு 2009ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் ஜூரோங் கப்பல் பட்டறையின் நிர்வாக இயக்குநராக இருந்தார் என்றும் நீதித் துறை தனது கடமையைச் செய்வதிலிருந்து தடுத்தார் என்றும் திரு வோங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செம்ப்கார்ப் மரின் நிறுவனமும் கெப்பல் நிறுவனத்தின் கடற்துறைப் பிரிவும் ஒன்றிணைக்கப்பட்ட பின், வோங் சீட்ரியம் நிறுவனத்தில் இருந்து 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகினார்.
இவருடன் ஜூரோங் கப்பல் பட்டறையின் மூத்த பொது மேலாளரான லீ ஃபூக் காங், 75, மீது அதே ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சீட்ரியம் நிறுவனம் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தண்டத் தொகை செலுத்த ஏதுவாக இந்த வழக்கு விசாரணையைத் தள்ளிப்போடும் விதமான உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சிங்கப்பூர் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவும், அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளன.
வோங், லீ இருவரும் முறையே, $210,000, $200,000 பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.