இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, ஜூரோங் சமூக மருத்துவமனைக்கு இணை பேராசிரியர் டேன் யோக் யங் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார்.
கடந்த 2021 முதல் இப்பொறுப்பை வகித்து வரும் டாக்டர் குவெக் லிட் சின்னிடம் இருந்து ஏப்ரல் 1 அன்று அவர் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று மார்ச் 28ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இங் டெங் ஃபோங் மருத்துவமனை தெரிவித்தது.
என்யுஎச்எஸ் குழுமத்தின் கீழ், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, ஜூரோங் சமூக மருத்துவமனை, அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூரில் உள்ள மூன்று பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களில் என்யுஎச்எஸ்சும் ஒன்று. இது பல்வேறு மருத்துவமனைகள், தேசிய நிபுணத்துவ மருத்துவ மையங்கள், பலதுறை மருந்தகங்கள், ஒரு மருத்துவ நிலையம், சுகாதார அறிவியல் கல்வி நிறுவனங்களை மேற்பார்வையிடும் ஓர் ஒருங்கிணைந்த அமைப்பாகும்.
பேராசிரியர் டேன் மருத்துவத் தரம், பலன்களை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், தடையற்ற, நோயாளியை மையமாகக் கொண்ட பராமரிப்பை வழங்குவார் என்று அறிக்கை தெரிவித்தது.
இரைப்பை குடலியல் நிபுணராகப் பயிற்சி பெற்ற பேராசிரியர் டேன், 150க்கும் மேற்பட்ட வெளியீடுகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் படைத்துள்ளார்.
சுகாதார அமைச்சின் சுகாதார துணைத் தலைமை இயக்குநராக 2020 முதல் பணியாற்றி வரும் பேராசிரியர் டேன், முன்னர் மருத்துவ வாரியத்தின் துணைத் தலைவராகவும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பல்கலைக்கழக மருந்தியல் குழுமத் தலைவர், மருத்துவத் துறைத் தலைவராகவும் இருந்துள்ளார். அங்கு அவர் மருத்துவமனையில் மிகப்பெரிய மருத்துவ மற்றும் கல்வித் துறையை வழிநடத்தினார்.
கல்லீரல் மூல உயிரணுக்கள், கல்லீரல் மறுஉருவாக்கம் குறித்த ஆராய்ச்சிக்கான ஏ * ஸ்டார் அனைத்துலக கல்வியாளர் விருதுடன் (ஃபெல்லோஷிஃப்) ஏராளமான உள்ளூர், அனைத்துலக மாநாடுகளிலும் விருதுகளும் பெற்றுள்ளார்.