தெங்கா பகுதியில் மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் முறையை நிர்வகிக்கும் எஸ்பி குழுமம், கூடுதலாக ஆறு மாதங்களுக்கு உத்தரவாதம் வழங்கும்.
வீட்டுச் சாவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் அல்லது டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சாவிகளைப் பெறவுள்ளவர்கள், கூடுதல் உத்தரவாதத்தைப் பெறுவர் என்று எஸ்பி குழுமம் வியாழக்கிழமை (மார்ச் 28) தெரிவித்தது.
குளிரூட்டும் முறைக்கு ஏற்கெனவே வழங்கப்படும் 12 மாத உத்தரவாதத்துக்கு மேலாக இது அமைகிறது.
தெங்காவில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) முதல் மூன்று திட்டங்களின்கீழ் வீடு வாங்கியவர்கள், புதிய வீடுகளில் குளிரூட்டும் சாதனங்களில் தண்ணீர் கசிவதைக் கண்டறிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மார்ச் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை, குளிரூட்டப்பட்ட தண்ணீர்ப் பயன்பாட்டுக் கட்டணம் ஒரு கிலோவாட்-மணி நேரத்துக்கு 12.2 காசாகக் குறையும் (ஜிஎஸ்டிக்கு முன்னர்) என்று எஸ்பி குழுமம் தெரிவித்தது. நடப்பு காலாண்டில் இந்த விகிதம் 13.2 காசாக உள்ளது.
குளிரூட்டும் முறைக்கான பயன்பாட்டுக் கட்டணம் காலாண்டுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படுகிறது.
கூடுதல் உத்தரவாதமும் குறைக்கப்பட்ட பயன்பாட்டுக் கட்டணமும் குளிரூட்டும் முறையைப் பயன்படுத்துவோருக்குக் கூடுதல் பயன்தரும் என்று எஸ்பி குழுமம் சொன்னது.