வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிக்கும் 950,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர்க் குடும்பங்கள் ஏப்ரல் மாதம் பொருள், சேவை வரி யு-சேவ் பற்றுச்சீட்டு, சேவை பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளைப் பெறுவார்கள் என்று நிதி அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது.
2024 நிதியாண்டின் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடி திட்டம் மற்றும் உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் இவை வழங்கப்படுகின்றன.
ஜிஎஸ்டி, உயர்ந்து வரும் வாழ்க்கை செலவுகளைச் சமாளிக்கும் நோக்கத்தில் ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி மாதங்களில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.
வீவக வீடுகளில் அதிகரிக்கும் மின்சாரம், தண்ணீர் செலவுகளை சமாளிக்க தகுதிபெறும் குடும்பங்களுக்கு 950 வெள்ளி வரை தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளன.
இந்தத் தள்ளுபடிகள், நகர மன்றங்கள் நிர்வகிக்கும் சேவை, பராமரிப்புக் கணக்குகளில் நேரடியாகச் சேர்க்கப்படும் என்பதால் தகுதிபெறும் குடும்பங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.