ஜார்ஜ்டவுன்: 2026ஆம் ஆண்டுக்குள் மலேசியாவின் பினாங்குத் தீவில் கடல் டாக்சிகள் முழுவீச்சில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசலால் பினாங்கு தீவு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில் கடல் டாக்சிகள் அறிமுகப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடல் டாக்சிகளுக்கான கட்டணம் 1.30 ரிங்கிட் முதல் (S$0.37) 15.90 ரிங்கிட் (S$4.50) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவே மலேசியாவில் வழங்கப்படும் முதல் கடல் டாக்சி சேவையாகும்.
கடல் டாக்சி சேவை தயாரானதும் அது ஆறு பயணப் பாதைகளில் சேவை வழங்கும். ஸ்ட்ரெய்ட்ஸ் கீ, வெல்டு கீ, பந்தாய் ஜெரேஜாக், பத்து மவுங் ஆகிய படகுத்துறைகளுக்கு இடையே கடல் டாக்சி சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15லிருந்து 45 நிமிடங்கள் வரையிலான இடைவெளியில் கடல் டாக்சி சேவை வழங்கப்படும் என்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
ஒவ்வொரு படகிலும் 20 பயணிகள், இரண்டு படகுச் சிப்பந்திகள் பயணம் செய்யலாம். மொத்தம் 14 படகுகளும் இரண்டு மீட்புப் படகுகளும் இருப்பதாக பினாங்கு மாநில அரசு தெரிவித்துள்ளது.