தேசியக் கலைகள் மன்றம் நடத்திய தங்கமுனைப் போட்டியில் 2023ஆம் ஆண்டு கவிதைக்கான முதல் பரிசை வென்ற திருவாட்டி கங்காவின் கவிதைகளை “நதியோடு கவிப்பொழுது” எனும் பெயரில் பின்னணி இசையோடு வாசிக்கும் நிகழ்வு மார்ச் 24ஆம் தேதி ஞாயிறு மாலை நடந்தேறியது. நிகழ்வு திட்டமிட்டபடி இரவு 7.00க்கும் 8.00 மணிக்கும் இரண்டு முறை வெவ்வேறு பார்வையாளர்களுக்காகப் படைக்கப்பட்டது.
திருவாட்டி கங்கா தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனது படைப்புகள் குறித்து இடையிடையே பார்வையாளர்களிடம் உரையாடியபடியே கவிதைகளைப் படைத்தார். திரு பஷீரின் பின்னணி இசை நிகழ்வுக்கு மேலும் மெருகேற்றியது.
மொழி பேதமின்றி சிங்கப்பூரின் பல்லினச் சமூக மக்களும் திருவாட்டி கங்காவின் நண்பர்களும் எஸ்பிளனேட் திறந்தவெளி அரங்கில் இந்நிகழ்வினைக் காணக் கூடியிருந்தனர். இந்தக் கவிதை வாசிப்பு நிகழ்ச்சிக்கான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை எஸ்பிளனேட் நிறுவனம் செய்திருந்தது.
நிகழ்வின் நிறைவில் பார்வையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
செய்தி: யாழிசை மணிவண்ணன்