ஸ்கூட் விமானம் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரிலிருந்து தென்கொரியா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளுக்கு வாரந்தோறும் கூடுதல் விமானச் சேவை வழங்குகிறது.
தென்கொரியத் தலைநகர் சோலுக்குத் தற்போது வாரத்துக்கு மூன்று முறை விமானங்களை அது இயக்குகிறது. ஏப்ரல் 1லிருந்து இது நான்கு முறையாக உயர்த்தப்படும்.
வாரந்தோறும் சிங்கப்பூரிலிருந்து தைவானுக்குச் செல்லும் ஸ்கூட் விமானங்களின் எண்ணிக்கை 19லிருந்து 21ஆக உயர்த்தப்படுகிறது.
சிங்கப்பூரிலிருந்து தைப்பே வழியாக தோக்கியோ மற்றம் சோலுக்குக் கூடுதல் விமானச் சேவையை ஸ்கூட் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து தைப்பே வழியாக தோக்கியோவுக்கு தற்போது வாரந்தோறும் ஏழு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது 12ஆக உயர்த்தப்படும்.
இதுபோன்று தைப்பே வழியாக சோல் செல்லும் ஸ்கூட் விமானங்கள் நான்கிலிருந்து ஐந்தாக உயர்த்தப்படும்.
சிங்கப்பூரிலிருந்து தைப்பே, தோக்கியோ, சோல் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாலும் பயணிகளுக்குக் கூடுதல் தெரிவுகள் வழங்கவும் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக ஸ்கூட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
15 நாடுகள், 72 நகரங்களுக்கு ஸ்கூட் நிறுவனம் விமானச் சேவை வழங்குகிறது.
ஏப்ரல் 1லிருந்து வழங்கப்படும் கூடுதல் சேவை தொடர்பான தகவல்களைப் பற்றி ஸ்கூட் நிறுவனத்தின் இணையப்பக்கத்துக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.