‘பெய்த்ஆக்ட்ஸ்’ எனப்படும் லாப நோக்கற்ற அமைப்பு மார்கரெட் டிரைவில் புதிய துடிப்புடன் மூப்படைதல் நிலையத்தை திறந்துள்ளது.
மூத்தோர் அவர்களுக்காக நடத்தப்படும் நடவடிக்கையில் மட்டும் கலந்துகொள்வதோடு நில்லாமல் அவர்களுக்கான நடவடிக்கை திட்டங்களையும் அவர்கள் அமைத்துக்கொள்ளலாம்.
நிலையத்தில் ‘பெய்த்ஆக்ட்ஸ்’ அமைப்புக்கு ஆதரவாக இபாஷோ என்னும் மற்றொரு லாப நோக்கற்ற அமைப்பு உதவுகிறது.
இந்த நடவடிக்கைக்கு ஹெல்த்கேர்@குவீன்ஸ்டவுனும் ஒத்துழைப்பு தருகிறது. இதன் மூலம் சிங்கப்பூரில் முதல்முறையாக இபாஷோ திட்டத்துக்கு ஹெல்த்கேர்@குவீன்ஸ்டவுன் ஆதரவு தருகிறது.
குவீன்ஸ்டவுனில் உள்ளவர்கள் துடிப்புடனும் உற்சாகமாக வாழவும் இந்த திட்டங்கள் உதவும் என்று நம்பப்படுகிறது.
சிங்கப்பூரில் மூப்படைந்தவர்கள் அதிகம் வாழும் இடங்களில் குவீன்ஸ்டவுன் வட்டாரமும் ஒன்று. அங்கு வாழ்பவர்களில் 20 விழுக்காட்டினர் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதைத் தாண்டியவர்கள்.
2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை குவீன்ஸ்டவுனில் நான்கு பாகங்களாக இபாஷோ நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இபாஷோ என்பது ஜப்பானிய மொழியில் “தான் இருக்கும் இடத்தை சொந்த வீட்டைப் போல் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும் முறையாகும்”. இவ்வாறு செய்வதன் மூலம் சமூகத்திற்கும் மூத்தோர் உதவும்போக்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இபாஷோ நடவடிக்கைகள் ஜப்பான், பிலிப்பீன்ஸ், நேப்பாளம் ஆகிய நாடுகளிலும் இடம்பெறுகின்றன. அது முதல்முறையாக 2012ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகம் கண்டது. மூத்தோர் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் சிங்கப்பூரும் உள்ளது, அதனால் இதுபோன்ற வாழ்க்கைமுறை நடவடிக்கைகள் மக்களுக்கு உதவும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

