தொலைக்காட்சி, யூடியூப் காணொளிகள், சமூக ஊடகத் தளங்கள் போன்றவை மூலம் இளம் பிள்ளைகள் தமிழ்மொழியோடு தொடர்புபடுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
“மொழியைக் கேட்டு, பார்த்து, படிப்பதன் மூலம் பிள்ளைகள் எளிதாக அதைக் கற்க முடியும். ஒவ்வொரு தலைமுறையும் அவர்களின் தாய்மொழியோடு இணைக்கப்படவேண்டியது இன்றியமையாத ஒன்று,” என்றார் அவர்.
இவ்வாண்டுத் தமிழ்மொழி விழாவின் தொடக்கநிகழ்ச்சிக்கு முன்னதாக சனிக்கிழமை (மார்ச் 30) மாலை, குமாரி இந்திராணி ராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.
மூத்தோருடன் தாய்மொழியில் பேசுவது, ஒருவரின் மரபு மற்றும் கலாசார அடையாளத்தைத் தெரிந்துகொள்வது ஆகியவற்றுக்கு தாய்மொழி மிக அவசியம்.
தமிழ்மொழி கற்றல் இளம் பருவத்திலேயே விதைக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு இடையிலான புரிதலுக்கு தாய்மொழி ஒரு கடவுச்சீட்டுபோல என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்மொழியைப் பாதுகாத்து அதை அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற முக்கிய நோக்கில் வளர்தமிழ் இயக்கம் கடந்த 18 ஆண்டுகளாகத் தமிழ்மொழி விழாவைச் சிறப்பாக நடத்தி வருகிறது.
இவ்வாண்டுத் தமிழ்மொழி விழாவின் கருப்பொருள் ‘ஆற்றல்’ என்பதாகும். மார்ச் 30ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28ஆம் தேதி வரை 48 பங்காளித்துவ அமைப்புகள் 47 நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன.
புதிய முயற்சியாக இவ்வாண்டு தமிழ்மொழி விழாவில் நிகழ்ச்சிகளைப் படைக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. அவ்வகையில் புதிதாக ஒன்பது அமைப்புகள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பட்டியலில் சேர்ந்துள்ளன.
இளையர்கள் மத்தியில் தமிழ்மொழிப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளை ஒட்டி, 65 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இவ்வாண்டு, இளையர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். கலை, கலாசாரம், இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள் அவை.
“ஆற்றலைப் பயன்படுத்திகொண்டு தமிழ்மொழி விழாவில் புதுமையான நிகழ்ச்சிகள் படைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இவ்வாண்டு ஆற்றல் என்ற கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,” என்று வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் சு. மனோகரன் கூறினார்.