சிங்கப்பூரில் ஏறக்குறைய 50 உல்லாசக் கப்பல் பயணிகளுக்கு வாரயிறுதிப் பயணம் நிறைவேறாமல் போனது.
டபிள்யு என அறியப்பட விரும்பிய பயணிகளில் ஒருவர், மதர்ஷிப் செய்தி நிறுவனத்திடம் பேசினார். ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் குரூசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான கெந்திங் டிரீம் கப்பலில் மகிழ்உலா பயணம் மேற்கொள்ள தமது குடும்பம் முன்பதிவு செய்திருந்ததாக அவர் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி முன்பதிவு செய்யப்பட்டது.
பயணத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு மார்ச் 27ஆம் தேதி பயணத்துக்கான மின்னஞ்சல் டபிள்யு குடும்பத்தாருக்கு கிடைத்தது. எனவே, திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெறுவதாக அவர்கள் நினைத்தனர்.
ஆனால், பயண நாளன்று நிலவரம் மாறியது.
மார்ச் 29ஆம் தேதி, டபிள்யுவும் அவருடைய குடும்பத்தாரும் மாலை 5 மணியளவில் மரினா பே உல்லாசப் பயண நிலையத்துக்குச் சென்றனர்.
கப்பல் இரவு 8 மணிக்குப் புறப்படவிருந்ததாக டபிள்யு சொன்னார்.
ஒரு மணி நேரம் வரிசையில் நின்ற பிறகு, டபிள்யுவும் அவருடைய குடும்பத்தாரும் காத்திருப்பு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கப்பலில் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால் அறைகள் இல்லை என்று அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
தங்களைப் போல 46 பயணிகளுக்கு இதே நிலை ஏற்பட்டதாக டபிள்யு பகிர்ந்தார்.
காத்திருப்பு அறையில் இருந்த அவர்கள், முன்னதாக ஊழியர்களிடம் தங்கள் கடவுச்சீட்டுகளை ஒப்படைத்தனர்.
இரவு 7 மணிக்கும் நிலவரத்தில் மாற்றம் ஏற்படாததால் பயணிகள் விரக்தியடையத் தொடங்கியதாக டபிள்யு கூறினார்.
இரவு 7.45 மணிக்கு பயணிகளில் சிலர் கப்பலில் ஏற அழைக்கப்பட்டனர். ஏறக்குறைய 20 குழுக்கள் கப்பலில் ஏறினாலும், டபிள்யு குடும்பத்தார் உள்ளிட்ட இன்னும் பலர் உல்லாசப் பயண நிலையத்தில் காத்திருக்க நேரிட்டது.
மொத்தம் 50 பயணிகளால் கப்பலில் ஏற முடியவில்லை என்றும் இரவு 8 மணியளவில் அவர்களிடம் கடவுச்சீட்டுகள் திரும்பக் கொடுக்கப்பட்டதாகவும் டபிள்யு கூறினார்.
கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் டபிள்யுவும் அவருடைய குடும்பத்தாரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
கப்பலில் ஏற முடியாத பயணிகளுக்கு கப்பல் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கிடைத்ததாக டபிள்யு சொன்னார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் குரூசஸ் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.