சிங்கப்பூரிலுள்ள வங்கிகள் தாமாகவே முன்வந்து, சந்தேகத்துக்குரிய வாடிக்கையாளர் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் புதிய மின்னிலக்கத் தளம் அறிமுகம் கண்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி புதிய தளம் அறிமுகமானதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது.
பணமோசடி அல்லது பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கும் சம்பவங்களையும் அவை குறித்த தகவல்களையும் பகிர்வதற்கான கூட்டுத் தளம், ‘காஸ்மிக்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும்.
உலகளாவிய நிலையில், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல், பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களுக்கு நிதியளித்தல் போன்றவற்றுக்கு எதிரான போரில் அந்தப் புதிய தளம் கைகொடுக்கும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அந்தப் புதிய தளத்தை, சிங்கப்பூரின் ஆறு வங்கிகளுடன் இணைந்து ஆணையம் உருவாக்கியுள்ளது.
டிபிஎஸ் வங்கி, ஓசிபிசி வங்கி, யுஓபி வங்கி, சிட்டிபேங்க், எச்எஸ்பிசி, ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி ஆகியவை அவை. முதற்கட்டமாக அந்த ஆறு வங்கிகளும் ‘காஸ்மிக்’ தளத்தைப் பயன்படுத்தும்.
இத்தளத்தில் பகிரப்படும் தகவல்கள், மூன்று முக்கிய நிதிக் குற்றங்கள் தொடர்பான அபாயங்களில் கவனம் செலுத்தும் என்று ஆணையம் தெரிவித்தது.
வர்த்தகச் செயல்பாடுகளில் ஈடுபடாத நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், சட்டவிரோதக் காரணங்களுக்கு வர்த்தக நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல், பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களுக்கு ஆதவளிக்கும் வகையில் நிதி வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
இத்தகைய தகவல் பகிர்வு தொடர்பான சட்ட அடித்தளம், பாதுகாப்பு விதிகள் ஆகியவற்றை வரையறுக்கும் சட்டமும் ஏப்ரல் 1ஆம் தேதி நடப்புக்கு வந்துள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது.