புக்கிட் பாஞ்சாங்கில் மார்ச் 30ஆம் தேதி பிற்பகலில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த வோ வெங் சாய் மீது உலோகக் கம்பி ஒன்று விழுந்ததில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.
புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோட்டிலுள்ள புளோக் 434ன் மேற்கூரையிலிருந்து அந்தக் கம்பி அவர் மீது விழுந்ததாகக் கூறப்பட்டது.
அப்போது அந்த புளோக்கின் மேற்பகுதியில் ஊழியர்கள் பொருள்களை நகர்த்திக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
மார்ச் 30ஆம் தேதி பிற்பகல் 3.10 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
இதன் தொடர்பில் 21 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். கவனமின்றிச் செயல்பட்டுக் காயம் விளைவித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
உணவங்காடிக் கடைக்காரரான 57 வயது வோ, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
அந்த புளோக்கின் கூரையில் வீட்டு மேம்பாட்டுத் திட்டத்துக்காகப் பாதுகாப்புத் தடுப்புகள் பொருத்தப்பட்டதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியது.
திரு வோவிற்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மருத்துவச் செலவை குத்தைகை நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்றும் குடும்பத்தினர் கூறினர்.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.