சிங்கப்பூரில் தனியார் வீட்டு விலை இந்த ஆண்டின் (2024) முதல் காலாண்டில் மிதமடைந்துள்ளது.
விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை குறைந்த வேளையில், நிச்சயமற்ற பொருளியல், அதிகரிக்கும் ஆட்குறைப்பு, வட்டி விகித உயர்வு ஆகியவற்றால் தனியார் வீட்டு விலை குறைந்ததாகக் கருதப்படுகிறது.
முதல் காலாண்டில் தனியார் வீட்டு விலை 1.5 விழுக்காடு கூடியது. ஒப்புநோக்க, சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் அது 2.8 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
நகர மறுசீரமைப்பு ஆணையம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிட்ட முன்னோடி மதிப்பீட்டு அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை விற்பனையான தனியார் வீடுகளின் எண்ணிக்கை காலாண்டு அடிப்படையில் 20 விழுக்காடு குறைந்தது. ஆண்டு அடிப்படையில் அந்த விகிதம் ஏறக்குறைய 16 விழுக்காடு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலை, முதல் காலாண்டில் ஒரு விழுக்காடு கூடியது. 2023ன் நான்காம் காலாண்டில் அது 2.3 விழுக்காடாகப் பதிவானது.
தரை வீடுகளின் விலை 3.4 விழுக்காடு அதிகரித்தது. ஒப்புநோக்க, கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அது 4.6 விழுக்காடாக இருந்தது.