குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் இருந்தவாறு ஒருவர் தனது அடையாளத்தைக் கண்டுகொள்ளும்போது அதனால் தனக்கு உறவும் உறுதியும் இருப்பதை அவர் உணர்வார்.
ஆனால், இந்த உணர்வுகள் தீவிரமடையும்போது பொய்ச் செய்திகள் அல்லது சமரசமற்ற ஒரு சித்தாந்தம் அடிப்படையில் அவநம்பிக்கைகள் எழலாம் என்றார் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்.
முன்பைவிட உலகம் இப்போது மேலும் ஆபத்தானதாக, வன்முறை நிறைந்ததாக உருவெடுத்துள்ள நிலையில், இத்தகைய சிந்தனையின் தீய விளைவுகளுக்கு எதிராகத் தற்காத்துக்கொள்ள சிங்கப்பூர் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என்றார் அவர்.
ஏப்ரல் 1ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட சமய மறுவாழ்வுக் குழுவின் (ஆர்ஆர்ஜி) வருடாந்திர ‘இஃப்தார்’ நிகழ்ச்சியில் திரு வோங் கலந்துகொண்டு பேசினார்.
இத்தகைய தீவிரச் சிந்தனையுடைய குழுக்கள் உலகெங்கும் உண்மையான மிரட்டல்களை விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தங்களின் சமயம் சார்ந்த பொய்யான, தீவிரமான வடிவத்தைப் பரப்பும் குழுக்கள், கொவிட்-19 கொள்ளைநோயின்போது தடுப்பூசிக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியோர் போன்ற பிரிவுகள் இதில் அடங்கும்.
“சிங்கப்பூரர்களான நமக்கு இது எதைக் குறிக்கிறது? நமது சொந்த சமூகத்தையும் நம்மிடையே எளிதில் பாதிக்கப்படுவோரையும் பார்த்துக்கொள்வதே இயல்பாக நமக்கு முதலில் தோன்றும் எண்ணம். ஆனால், நம் கரைகளையும் தாண்டி அனைத்துலக சமூகத்தில் பொறுப்புள்ள உறுப்பினராக எவ்வாறு பங்காற்றுவது என்பதை நாம் ஆராயவேண்டும்,” என்று கேலாங்கில் உள்ள கதிஜா பள்ளிவாசலில் அவர் பேசினார்.
பள்ளிவாசலுக்கு ஆர்ஆர்ஜி உறுப்பினர்கள், அனைத்து அமைப்பு பின்கவனிப்புக் குழு, மூத்த முயிஸ் தலைவர்கள், சமயத் தலைவர்கள் ஆகியோர் வந்திருந்தனர்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மூன்று முறை நிவாரணப் பொருள்களை சிங்கப்பூர் அளித்தது, பிரெஞ்சு கடற்படை கப்பல் ஒன்று மருத்துவக் குழு ஒன்றை சிங்கப்பூர் ஆயுதப் படை அனுப்பியது போன்ற உதாரணங்களைச் சுட்டினார் திரு வோங்.
சிங்கப்பூரில் ஆர்ஆர்ஜி போன்ற அமைப்புகள் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்த முக்கியப் பங்கு ஆற்றிவருவதாகவும் துணைப் பிரதமர் வோங் கூறினார்.
நிகழ்வின்போது ‘உஸ்தாஸ் அலி ஹஜி முகம்மது’ உள்ளரங்கத்தை திரு வோங் திறந்து வைத்தார்.
இதே நிகழ்வில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி ஆகியோரும் கலந்துகொண்டனர்.