கடந்த 2022ஆம் ஆண்டில் 35 விழுக்காடு அதிகரித்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டு வாடகை 2023ஆம் ஆண்டில் நிலைப்பட்டது என்று தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தார்.
குடியிருப்புகளுக்கும்; மூன்று அறை, நான்கு அறை, ஐந்து அறை வீவக வீடுகளுக்கும் திறந்த சந்தையில் வாடகை அதிகரிப்பு 2021ஆம் ஆண்டில், ஆண்டு அடிப்படையில் சராசரி 5 விழுக்காடாக இருந்தது.
இது 2022ஆம் ஆண்டில் 35 விழுக்காடாக அதிகரித்தது, ஆனால் 2023ஆம் ஆண்டில் 10 விழுக்காடாகக் குறைந்தது என்று பிரதமர் அலுவலக அமைச்சருமான இந்திராணி ராஜா கூறினார்.
செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் சுவா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
2022ஆம் ஆண்டில் திறந்த சந்தை வாடகைகள் அதிகரித்ததற்கு எல்லைக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதும் குடியிருப்பாளர் அல்லாதோருக்கான வாடகைக் குடியிருப்புகளின் தேவை அதிகரித்ததும் காரணம் என்றார் அவர்.
கொவிட்-19 தொற்றுநோய் பரவலால், முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வீடுகளின் விநியோகம் குறைந்ததும், வாடகை வீடுகளின் தேவை அதிகரித்ததும் கடந்த மூன்று ஆண்டுகளில் வாடகை அதிகரித்ததற்கு காரணம் என்று அவர் விளக்கினார்.
வாடகை அதிகரித்ததைத் தொடர்ந்து, தனியார், வீவக வீடுகளின் விநியோகத்தை அதிகரித்தல், பெரிய வீவக குடியிருப்புகள், தனியார் குடியிருப்பு சொத்துகளில் குடியிருப்போர் எண்ணிக்கை வரம்பை தற்காலிகமாக தளர்த்துதல் உள்ளிட்ட வாடகை வீடு தேவைப்படும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளை அமைச்சு செயல்படுத்தியுள்ளது.
மேலும், பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கான இடைக்கால வீட்டுத் திட்டத்தின் கீழ் வாடகை வீடுகள் அதிகரிக்கப்படும் என்று 2024 வரவுசெலவு திட்டத்தில் அமைச்சு அறிவித்தது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தங்கள் புதிய வீவக வீடுகளுக்குக் காத்திருக்கும் காலத்தில் வாடகைக்கு வீட்டைப் பெற இத்திட்டம் உதவுகிறது.
வீவக வீடுகளின் வாடகை ஜனவரி மாதத்திலிருந்து பிப்ரவரியில் 1 விழுக்காடு அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது என்று எஸ்ஆர்எக்ஸ், 99.co ஆகியவற்றின் மார்ச் மாத தரவுகள் சுட்டின.
இருப்பினும் வாடகை எண்ணிக்கை 19.1 விழுக்காடு குறைந்து 2,448 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. இது ஜனவரியில் 3,027 வீடுகளாக இருந்தது.
ஆண்டு அடிப்படையில் அனைத்து வகை வீடுகளுக்கு வாடகை உயர்ந்துள்ளது. எக்சிகியூட்டிவ் வீடுகள் வாடகை 9 விழுக்காடு, ஐந்து அறை வாடகை 8.1 விழுக்காடு, நான்கு அறை வாடகை 8.5 விழுக்காடு, மூன்று அறை வீடுகளுக்கு 7.8 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று எஸ்ஆர்எக்ஸ் கூறியது.